தரம் தாழ்ந்த பேச்சு.. "ஆயுதத்தை நீங்கள் தான் தேர்வு செய்கிறீர்கள்".. பாஜகவுக்கு அதிமுக எச்சரிக்கை..!!
Words war between AIADMK and BJP on Twitter
தமிழக பாஜகவில் இருந்து விலகிய நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருதரப்பினருக்கும் இடையே மோதல் போக்கை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவரிடம் பாஜக நிர்வாகிகள் தொடர்ந்து அதிமுகவில் இணைவது குறித்து பாஜகவினர் வைக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர் "எங்கள் கட்சியிலிருந்து சென்றவர்களை பாஜகவில் சேர்த்த போது இனித்தது. இப்பொழுது அங்கே இருந்து இங்கே வரும் பொழுது கசக்கிறதா? பாகஜாவினருக்கு சகிப்புத்தன்மை வேண்டும்.
வாய்க்கொழுப்போடு பேசக்கூடாது. மத்தியில் ஆளும் திமிரோடு பேசக்கூடாது. கூட்டணி கட்சிகள் தோளில் ஏறி உட்கார்ந்து காதை கடிப்பதெல்லாம் அதிமுக பொறுத்துக் கொண்டிருக்காது. எடப்பாடி பழனிச்சாமியின் உருவப்படத்தை எரிக்கும் அளவிற்கு தரம் தாழ்ந்து போய் விட்டார்கள்" என கடுமையாக பேசி இருந்தார்.

இதற்கு தமிழக பாஜகவின் விளையாட்டு பிரிவு மாநில பொறுப்பாளர் அமர் பிரசாத் ரெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் "வாய்க்கொழுப்பின்றி பேசுவது திமிர் இன்றி நடந்து கொள்வது என்பது குறித்து எல்லாம் வகுப்பு எடுக்க மதுரையில் விரைவில் கல்லூரி துவங்க போறாராம் செல்லூர் ராஜு. நெருங்கிய நட்பில் இருக்கும் யாராவது ஒரு சீட்டு வாங்கி கொடுங்கப்பா!" என கிண்டலாக பதிவிட்டு இருந்தார்.
மேலும் "இத்தனை நாட்கள் தெர்மாகோல் ஆராய்ச்சியில் இருந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு திமிரில் பேசக்கூடாது என பாஜகவுக்கு ஆலோசனை சொல்கிறார். அவர் தன்னை வளர்த்துக் கொண்ட பின்ன கருத்து சொன்னால் நல்லது" என மீண்டும் பதிவிட்டிருந்தார்.

இதற்கு அதிமுக தரப்பில் இருந்து கடும் கண்டனம் எழுந்துள்ளது. மதுரை மண்டல அதிமுக ஐடி விங் பொறுப்பாளர் ராஜ் சத்யன் தனது ட்விட்டர் பக்கத்தில் "அண்ணன் செல்லூர் ராஜு பத்து வருடங்கள் கூட்டுறவுத்துறை அமைச்சர் 3 முறை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர், மக்கள் பிரதிநிதியாக ஒரு முறையாவது தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால் உங்களுக்கு அவரின் வளர்ச்சி புரிந்திருக்கும்! தரம் தாழ்ந்து பேசுவது அழகல்ல ஆயுதத்தை நீங்கள் தான் தேர்வு செய்கிறீர்கள் கவனம்" என பாஜக பிரமுகர் அமர்பிரசாத் ரெட்டிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்தும் அடங்காத அமர் பிரசாத் ரெட்டி முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவை தொடர்ந்து ஜெயகுமாரையும் சீண்டி உள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "அதிமுக தொண்டர்கள் கோவப்பட்டால் பாஜக தாங்காதுனு ஜெயக்குமார் அண்ணன் சொல்லி இருக்காங்க. இந்தக் கோபம் ஈரோடு தேர்தலில் முறைகேடுகளில் ஈடுபட்ட திமுக மேல வரலையே அண்ணா!" என கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக பாஜக நிர்வாகிகள் எழுதிய அதிகரித்து வரும் மோதல் போக்கு நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியில் எதிரொலிக்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் நாளை பாஜகவின் அகில இந்திய தலைவர் ஜெ.பி நட்டா தமிழகம் வரவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Words war between AIADMK and BJP on Twitter