அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா பதவியேற்க வேண்டும்.! சற்றுமுன் பெரும் பரபரப்பு.!
ulunthoorpet admk members protest
கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுக மீண்டும் வெற்றி பெற்று, முதலமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்று கொண்டார். அவரின் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறின.
முதலமைச்சராக பொறுப்பேற்றிருந்த பன்னீர்செல்வம், முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார். எடப்பாடி கே பழனிசாமி முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோல், அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலாவும், துணைப் பொதுச்செயலாளராக டிடிவி தினகரனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதற்கிடையே, சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு செல்ல, கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி அதிமுக வின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
அப்போது, அதிமுகவின் பொதுச் செயலாளர் மற்றும் துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சசிகலா மற்றும் தினகரன் நீக்கப்பட்டனர். மேலும், அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரண்டு பதவிகள் உருவாக்கப்பட்டு, அந்த பதவிகளில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி கே பழனிசாமி தேர்வு செய்யப்பட்டனர்.
இதனையடுத்து, இந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று அறிவிக்க கோரி சசிகலா சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சசிகலா தொடர்ந்த இந்த வழக்கை நிராகரிக்க கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி மற்றும் அவைத்தலைவர் மதுசூதனன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், உளுந்தூர்பேட்டை வட்டாச்சியர் அலுவலகம் அருகே அதிமுகவினர் திடீர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா பதவியேற்க வேண்டும் என்று சொல்லி, அதிமுகவினர் சுமார் 100 பேர் மனித சங்கிலி போராட்டம் நடத்தி வருகின்றனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக இரு தினங்களுக்கு முன் செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், "மிகவும் பலம் வாய்ந்த அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளது.
அதிமுகவை பொறுத்தவரை தனிநபர், தனி குடும்பம் கட்சியில் ஆளுமை செலுத்த முடியாத நிலைமையை கடந்த 4 வருடங்களுக்கு முன்பே இதனை ஏற்படுத்தி விட்டோம். யார் எந்த முயற்சி செய்தாலும் அதிமுகவை கைப்பற்ற முடியாது என்பதை ஆணித்தரமாக தெரிவித்து கொள்கிறேன்' என்று தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
ulunthoorpet admk members protest