பெண்ணியம் பேசும் நீங்கள், உங்கள் சொந்த வாழ்க்கையிலும் அந்த கண்ணியத்தை காக்க வேண்டாமா? தவெக கட்சியின் நிர்வாகி ரஞ்சனா நாச்சியார் விஜய்க்கு சரமாரி கேள்வி..!
TVK Party executive Ranjana Nachiyar asked Vijay if he should protect that dignity in his own life
தவெக தலைவரும், நடிகருமான விஜய் சமீப காலமாக பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அவர் அரசியலுக்கு வந்த நேரத்தில் இருந்து பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறார். தற்போது விஜய்யின் மனைவி சங்கீதா, தன் கணவர் வேறு ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக குற்றஞ்சாட்டி செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில், நேற்று தவெக சார்பில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், ''தாய் மாமனாக இருப்பதற்கு முன், பெற்ற குழந்தைகளுக்கு தகப்பனாக இருப்பது முக்கியம் இல்லையா?'' என வெக பெண் நிர்வாகி ரஞ்சனா நாச்சியார், விஜய்க்கு சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்று மகாபலிபுரத்தில் நடந்த தவெக மகளிர் தின விழாவில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசும் போது, 'கவலைப்படும் அளவுக்கு வொர்த் கிடையாது' என்று தனது விவாகரத்து குறித்து பேசியிருந்தார். இதற்கு சிலர் ஆதரவும் சிலர் விமர்சனமும் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தவெக கட்சியின் நிர்வாகியான ரஞ்சனா நாச்சியார் விஜய்யின் பேச்சை விமர்சித்து கேள்விகளை எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது;
''நேற்று தவெக மகளிர் தினம் கொண்டாடப்பட்டதில், விஜய்க்கும் அவரது மனைவிக்கும் இடையே நிலவிவரும் பிரச்சினையை நேரடியாகச் சொல்லாமல், கோடிட்டுக் காட்டும் விதத்தில் குறிப்பிட்டிருந்தது. "அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். நான் பார்த்துக்கொள்கிறேன். அது worth ஏ இல்லை" என்று கூறினீர்கள். அந்த ஒரு வாக்கியம்தான் இன்று பல கேள்விகளை எழுப்புகிறது. எது worth இல்லை தலைவா? உங்கள் மனைவியா? அல்லது உங்கள் திருமண வாழ்க்கையா?
உங்கள் மனைவியை உங்கள் வீட்டினுள் அனுமதிக்காமல் இருக்கிறீர்கள் என்ற குற்றச்சாட்டுகள் பேசப்படும் நேரத்தில், வீட்டிற்கு ஆறு சிலிண்டர் இலவசமாக தருகிறேன்" என்று மேடையில் பேசுவது ஒரு கடுமையான முரண்பாடாக தெரியவில்லையா?

ஒரு பக்கம் பெண்கள் உயர்வு பற்றி பேசுகிறீர்கள். மற்றொரு பக்கம் பெண்களின் மரியாதையை காக்கும் மொழி கூட உங்கள் வார்த்தைகளில் காணப்படவில்லை என்றால், அந்த அரசியல் எதற்காக? உங்கள் உண்மை முகம்தான் என்ன?
"தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே” என்ற பழமொழி உங்களுக்கு தெரியாதா? ஒரு நடிகையை கூட்டிக்கொண்டு பொது வெளியில் வரும்போது, அதை பார்த்து இன்றைய இளைஞர்கள் என்ன கற்றுக்கொள்வார்கள்? “திருமணத்திற்கு பின்பு நாமும் இப்படியே வாழலாம்” என்ற எண்ணம் அவர்களிடம் விதைக்கப்படாதா?
வேலுநாச்சியாரை கொள்கைத் தலைவராக கூறிக்கொண்டு, பெண்ணியம் பேசும் நீங்கள், உங்கள் சொந்த வாழ்க்கையிலும் அந்த கண்ணியத்தை காக்க வேண்டாமா? பெண்ணியம் என்பது மேடையில் முழக்கம் அல்ல. வாழ்க்கையில் ஒழுக்கம்.

"பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தாய் மாமனாக சீர் கொடுப்பேன்" என்று நீங்கள் கூறியிருக்கிறீர்கள். அது நல்ல எண்ணம். ஆனால் அடுத்த குழந்தைக்கு தாய் மாமனாக இருப்பதற்கு முன், பெற்ற குழந்தைகளுக்கு தகப்பனாக இருப்பது முக்கியம் இல்லையா? நீங்கள் சீர் கொடுக்க வேண்டாம், தலைவா இளைஞர்களை சீர்குலைக்காமல் இருப்பதே சிறந்தது.
தமிழக வெற்றிக்கழகத்தில் பயணித்துக்கொண்டே இதை நான் சுட்டிக்காட்டாவிட்டால் அது நம் கழகத்துக்கும், மக்களுக்கும், உங்களை நம்பியிருக்கும் இளைஞர்களுக்கும் நான் செய்யும் மிகப்பெரிய துரோகம் ஆகும்.'' என்று அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
TVK Party executive Ranjana Nachiyar asked Vijay if he should protect that dignity in his own life