வாலை ஆட்டி பதவி பெற்றவர் லியோனி.! போட்டு தாக்கிய தமிழிசை.!!
Tamilisai response to leonie criticism
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை சார்பில் தேசிய கல்விக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட மூன்றாம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மேலும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்ட வரும் பங்கேற்றனர்.
இந்த விழாவில் பேசிய தமிழிசை சௌந்தரராஜன் "புதுச்சேரியில் அமலாகியுள்ள புதிய கல்விக் கொள்கை தாய்மொழி கல்வியை ஊக்குவிக்கிறது. அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதே அதன் நோக்கம். தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வி என கூறினார்கள் ஆனால் யாருக்குமே கல்வி சீராகவே கிடைக்கவில்லை.
புதுவைக்கு வந்த தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் லியோனி மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் தமிழை பறித்து விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். சிபிஎஸ்இ பாடத்திட்டம் 22 மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது. இது கூட அவருக்கு தெரியவில்லை.
இதில் அவர் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக இருக்கிறார் என்பது வேதனை அளிக்கிறது. புதுவை மாநில முதல்வர் ரங்கசாமியை தலையாட்டி பொம்மை என விமர்சனம் செய்துள்ளார். அதற்கு நான் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி சிறப்பான ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்.
யார் யாருக்கோ வாலை ஆட்டிவிட்டு பதவி பெற்றவர்தான் இந்த லியோனி. தொலைநோக்குப் பார்வையுடன் உருவாக்கப்பட்ட புதிய கல்விக் கொள்கையால் புதுவையில் கல்வி முன்னேற்றம் கண்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து வருபவர்கள் புதிய கல்விக் கொள்கையை விமர்சனம் செய்வதை ஏற்க முடியாது" என தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.
English Summary
Tamilisai response to leonie criticism