ஏராளமான தீரர்களை இழந்துவிட்டோம்! இனி ஒரு உயிரையும் நாம் இழக்கக் கூடாது! - மு.க ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தி!
Stalin condoled DMK admin suicide against Hindi imposition
சேலம் மாவட்டத்தை அடுத்த மேட்டூர் பகுதி பி.என்.பட்டி பேரூராட்சிக்குட்பட்ட 18 வது வார்டு தாழையூர் பகுதியை சேர்ந்த 85 வயதாகும் விவசாயி தங்கவேல். இவர் நங்கவள்ளி திமுக முன்னாள் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளராக இருந்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை இந்தி திணிப்பை எதிர்த்து கோஷமிட்டபடி தாழையூர் திமுக அலுவலகத்திற்கு வந்த அவர் அப்போது கையில் வைத்திருந்த பெட்ரோல் கேனை தனது உடல் மீது ஊற்றி தீக்குளித்து உயிரிழந்தார்.

அவர் தீக்குளிப்பதற்கு முன்பாக எழுதி வைத்திருந்த கடிதத்தில் 'மத்திய அரசே அவசர இந்தி வேண்டாம் தாய்மொழி தமிழ் இருக்க இந்தி எதற்கு' என எழுதி இருந்தது. திமுக நிர்வாகி தீக்குளித்து இறந்த நிகழ்வுக்கு திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
அந்த இரங்கல் செய்தி குறிப்பில் "இடியென வந்த செய்தியால் கலங்கித் தவிக்கிறேன். சேலம் மாவட்டம் நங்கவள்ளி பகுதி தாழையூரைச் சேர்ந்த கழக விவசாய அணி முன்னாள் ஒன்றியப் பொறுப்பாளர் திரு. தங்கவேல் அவர்கள், இந்தித் திணிப்பிற்கு எதிராகத் தன்னுடலைத் தீக்கிரையாக்கிக் கொண்டார் என்றறிந்து வேதனையில் உழல்கிறேன்.

இந்தித் திணிப்புக்கு எதிராக உயிர்த்தியாகம் செய்துள்ள தாழையூர் தங்கவேலுவுக்கு வீரவணக்கம்! இந்தித் திணிப்பை எதிர்த்து அரசியல்ரீதியாக - ஜனநாயக வழியில் தொடர்ந்து போராடுவோம்! ஏற்கனவே ஏராளமான தீரர்களை இழந்துவிட்டோம். இனி ஒரு உயிரையும் நாம் இழக்கக் கூடாது! போராட்ட வடிவமாக இன்னுயிரை இழக்கும் செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்.

பன்முகத்தன்மைக் கொண்ட அழகிய நாட்டைக் குறுகிய மனப்பான்மையால் குலைத்திட வேண்டாம். 'இந்தியைத் திணிக்காதே' எனக் காலங்காலமாய் நாம் உரத்துச் சொல்லும் முழக்கம் ஆதிக்க மனப்பான்மையில் இந்தியைத் திணிக்கும் ஒன்றிய அரசின் செவிகளுக்கும் இதயத்துக்கும் எட்டும்வரை நாம் ஓயப்போவதில்லை. தாழையூர் தங்கவேலு அவர்களது குடும்பத்துக்கும் கழக உடன்பிறப்புகளுக்கும் இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என மு க ஸ்டாலின் இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
English Summary
Stalin condoled DMK admin suicide against Hindi imposition