கள் இறக்கும் அறப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தோருக்கு மிரட்டல்: சீமான் கண்டனம்..!
Seeman condemned for threatening those who supported the protest
தமிழக நாடார் சங்கம் மற்றும் ஐயா வைகுண்டர் மக்கள் கட்சித் தலைவருக்கு கள் இறக்கும் அறப்போராட்டத்திற்கு ஆதரவு அளித்த காரணத்திற்காக, மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
'நாம் தமிழர் கட்சியின் கள் இறக்கும் அறப்போராட்டத்திற்கு தமிழக நாடார் சங்கம் மற்றும் ஐயா வைகுண்டர் மக்கள் கட்சித் தலைவர் முத்து ரமேஷ் ஆதரவு தெரிவித்த காரணத்திற்காக, சமூக விரோதிகள் சிலர் அவருடைய வீட்டிற்கு சென்று, மிரட்டி அச்சுறுத்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
தமிழர்களின் வாழ்வாதார உரிமையான கள் இறக்கும் உரிமையை மீட்பதற்கு முத்து ரமேஷ் துணை நின்றதை தாங்கிக்கொள்ள முடியாத சிலரின் இத்தகைய அச்சுறுத்தல் கோழைத்தனமானது. அச்சுறுத்தல் செய்தவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் தமிழ்நாடு காவல்துறை இனியும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது.
அறவழியில் அமைதியாக நடைபெற்ற கள் இறக்கும் போராட்டத்தின் வெற்றியை பொறுத்துக்கொள்ள முடியாத ஆட்சியாளர்களின் தூண்டுதல் காரணமாகவே இத்தகைய மிரட்டி அச்சுறுத்தும் செயல்கள் நடந்துள்ளது. இதுபோன்ற செயல்கள் இனியும் தொடரக்கூடாது என்று எச்சரிக்கின்றேன்.' என்று சீமான் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Seeman condemned for threatening those who supported the protest