மதுரையில் ஓபிஎஸ் நடத்தும் பிரம்மாண்ட இணைப்பு விழா! 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைய உள்ளனர்! அதிர்ச்சியில் ஆர்பி உதயகுமார்!
OPS to hold grand merger ceremony in Madurai More than 1 lakh people to join DMK RP Udayakumar in shock
முன்னாள் முதலமைச்சரும் சமீபத்தில் திமுகவில் இணைந்துள்ளவருமான ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்), மார்ச் 7ஆம் தேதி நடைபெறும் இணைப்பு விழாவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைய உள்ளதாக தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலினின் தலைமையை ஏற்று பலரும் மனப்பூர்வமாக கட்சியில் இணைவதாகவும் அவர் கூறினார்.
சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தார். அவருடன் உசிலம்பட்டி முன்னாள் எம்எல்ஏ ஐயப்பன், மகன் ரவீந்திரநாத் உள்ளிட்ட முக்கிய ஆதரவாளர்களும் கட்சியில் இணைந்தனர். ஆரம்பத்தில் திமுகவில் இணைய தயக்கம் காட்டிய ஓபிஎஸுடன் திமுக தலைமை பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் அவருக்கு கட்சியில் உரிய மரியாதை வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுகவில் இணைந்த பிறகு தனது ஆதரவாளர்களையும் கட்சியில் இணைக்கும் முயற்சியில் ஓபிஎஸ் ஈடுபட்டுள்ளார். அதற்காக மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிரம்மாண்ட இணைப்பு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மார்ச் 7ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த விழாவுக்கான முன்னேற்பாடுகள் தொடங்கியுள்ளன. இதற்கான முகூர்த்த நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர் மூர்த்தி, தேனி மாவட்ட எம்பி தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், கடந்த ஐந்து ஆண்டுகளாக முதல்வர் ஸ்டாலின் சிறந்த ஆட்சியை வழங்கி வருவதாகவும், அந்த ஆட்சி தொடர வேண்டும் என்ற விருப்பம் மக்களிடையே இருப்பதாகவும் கூறினார். வரும் சட்டமன்றத் தேர்தலிலும் ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மார்ச் 7ஆம் தேதி நடைபெறும் இணைப்பு விழாவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைவார்கள் என்றும், அனைவரையும் ஒருங்கிணைத்து செல்லும் ஸ்டாலினின் தலைமையை ஏற்று பலரும் கட்சியில் சேர உள்ளதாகவும் ஓபிஎஸ் கூறினார். இந்த விழா மிக வெற்றிகரமாக நடைபெறும் என்ற நம்பிக்கையும் அவர் வெளியிட்டார்.
இணைப்பு விழா திருமங்கலத்தில் நடத்தப்படுவது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதிமுகவில் முக்குலத்தோர் சமூகத்தின் முக்கிய முகமாக கருதப்படும் ஆர்பி உதயகுமாரின் அரசியல் தாக்கம் அதிகமாக உள்ள பகுதியிலேயே இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அதனால் அங்கு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திமுகவில் இணைவது திமுகக்கு அரசியல் ரீதியாக ஒரு முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
English Summary
OPS to hold grand merger ceremony in Madurai More than 1 lakh people to join DMK RP Udayakumar in shock