விஜயின் சொத்து விவரங்கள் குறித்து புதிய மனு: மனைவி சங்கீதாவுக்கு ரூ.12 கோடி கடன்.. விஜய்க்கு புதிய சிக்கல்? சென்னை ஐகோர்ட்டில் வழக்கு!
New petition regarding Vijay property details Rs 12 crore loan to wife Sangeetha New problem for Vijay Case in Chennai High Court
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் நடிகர் விஜய் தாக்கல் செய்த தேர்தல் வேட்பு மனுவில் இடம்பெற்றுள்ள சொத்து விவரங்கள் மீண்டும் சட்டப்பூர்வ கவனத்தை ஈர்த்துள்ளன. அவரது சொத்து அறிக்கையில் முரண்பாடுகள் இருப்பதாக ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், தற்போது மேலும் ஒரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டுள்ளார். தேர்தல் விதிகளின்படி, வேட்பாளர்கள் தங்களது அசையும், அசையா சொத்துகள், வருமான விவரங்கள், கடன் விவரங்கள் உள்ளிட்ட தகவல்களை Form 26 மூலம் பிரமாணப்பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த நிலையில், சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் தாக்கல் செய்த புதிய மனுவில், விஜயின் சொத்து அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சில நிதி பரிவர்த்தனைகள் குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளார். குறிப்பாக, விஜய் தனது மனைவி சங்கீதாவுக்கு ரூ.12.6 கோடி கடன் வழங்கியதாகக் கூறியிருப்பது குறித்து விரிவான விசாரணை தேவைப்படுவதாக மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மனுதாரர் தரப்பில், “ஒரு வேட்பாளரின் சொத்து விவரங்கள் குறித்து வாக்காளர்களுக்கு முழுமையான தகவல் அறியும் உரிமை உள்ளது. வேட்பாளர்கள் உண்மையான தகவல்களை வெளிப்படுத்துவது சட்டப்பூர்வ பொறுப்பு. முக்கிய தகவல்களை மறைப்பது அல்லது தவறாக தெரிவிப்பது தேர்தல் நடைமுறையில் மோசடியாக கருதப்படலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குடும்ப உறுப்பினர்களுக்கும் தொடர்புடைய நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் பெரிய அளவிலான கடன் பரிவர்த்தனைகளின் உண்மைத்தன்மை, அதன் நோக்கம் மற்றும் சட்டபூர்வ தன்மை குறித்து நியாயமான கேள்விகள் எழுகின்றன என்பதால், தேர்தல் ஆணையமும் வருமான வரித்துறையும் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
இதற்கு முன்பே, விஜயின் வேட்பு மனுவில் தாக்கல் செய்யப்பட்ட சொத்து விவரங்களில் முரண்பாடு இருப்பதாக மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஜூன் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
புதிய மனு நாளை விசாரணைக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது. இதேபோன்ற கோரிக்கைகளுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் சி.வி. சண்முகம் தொடர்பான மனுக்களும் நீதிமன்றத்தில் பட்டியலிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வழக்குகள் தேர்தல் முடிவுகளுக்கு முன்னதாகவே அரசியல் வட்டாரங்களில் கூடுதல் கவனத்தை ஏற்படுத்தியுள்ளன. நீதிமன்றத்தின் ஆரம்பகட்ட நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது தற்போது எதிர்பார்ப்பாக உள்ளது.
English Summary
New petition regarding Vijay property details Rs 12 crore loan to wife Sangeetha New problem for Vijay Case in Chennai High Court