''இத்தனை நாட்கள் உறக்கத்தில் இருந்தீர்களா..? மேட்டூர் அணை நிலவரம் நேற்றுதான் தெரியுமா?'' முதல்வர் விஜய்யை விமர்சித்துள்ள நயினார் நாகேந்திரன்..!
Nainar Nagendran criticizes Chief Minister Vijay asking if he only learned about the Mettur Dams status yesterday
''முதல்வரின் நிர்வாக அலட்சியத்தால் பாதிக்கப்பட்ட குறுவை விவசாயிகளுக்கு தகுந்த இழப்பீடுகளை ஏக்கர் வீதம் கணக்கிட்டு அரசு வழங்க வேண்டும், மேட்டூர் அணையில் நீர்வரத்து குறைவாக இருப்பது நேற்றுதான் தெரியுமா? இத்தனை நாட்கள் உறக்கத்தில் இருந்தீர்களா முதல்வர் விஜய் அவர்களே?'' என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழக முதல்வரை விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது;
''இத்தனை நாட்கள் உறக்கத்தில் இருந்தீர்களா முதல்வர் விஜய் அவர்களே? டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடியை ஒட்டி ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட வேண்டும் என்பதும், இந்த ஆண்டு மேட்டூர் அணையில் நீர்வரத்து குறைவாக இருப்பதும் உங்களுக்கு நேற்றுதான் தெரியுமா? வருடந்தோறும் நடக்கும் வழக்கமான நிகழ்வைக் கூட முன்கூட்டியே ஆய்வு செய்து, திட்டமிட முடியாதளவிற்கு ரீல்ஸ் எடுப்பதில் படு பிஸியாகிவிட்டீர்களோ?
மேட்டூர் அணை நீர் திறந்துவிடப்பட வேண்டிய தேதியன்று வந்து, “நீர் குறைவாக உள்ளது அதனால் சிறப்புத் தொகுப்பு கொடுக்கிறோம்” என்று கதை சொல்கிறீர்களே, உங்கள் குறுவை சிறப்புத் தொகுப்பு திட்டம் என்றைக்கு செயல்பாட்டிற்கு வருவது, டெல்டா விவசாயிகள் எப்பொழுது தங்கள் நடவை ஆரம்பிப்பது?
மழைநீரும் அல்லாமல், அணை நீரும் தராமல் வெறும் வடிமுனைக் குழாய்களைக் கொண்டு மட்டுமே லட்சக்கணக்கான விளைநிலங்களில் பாசனம் செய்ய முடியுமா என்ற சாத்தியக் கூறுகளை முதலில் நீங்கள் ஆராய்ந்தீர்களா?
அதிலும் தமிழகத்தில் தொடர் மின்வெட்டு பிரச்சினைகள் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கையில், விவசாயிகளுக்கு 18 மணிநேரம் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்று நீங்கள் சொல்வது கேப்பையில் நெய் வடியும் கதையன்றி வேறென்ன?

இப்படி நடைமுறை சிக்கல்கள் எதையும் தெளிவாக கண்டறியாமல், நேற்றைக்கு ஒரு திட்டத்தை தீட்டி அதை இன்றைக்கு பேப்பரில் வெளியிட்டு விளம்பரம் தேடுவதில் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை முதல்வரே.
எனவே, முறையான ஆய்வுக் குழுவை அமைத்து இப்பிரச்சினையை போர்க்கால அடிப்படையில் அணுகுவதோடு, முதல்வரின் நிர்வாக அலட்சியத்தால் பாதிக்கப்பட்ட குறுவை விவசாயிகளுக்கு தகுந்த இழப்பீடுகளை ஏக்கர் வீதம் கணக்கிட்டு அரசு வழங்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்'' என்று அவர் கூறியுள்ளார்.
English Summary
Nainar Nagendran criticizes Chief Minister Vijay asking if he only learned about the Mettur Dams status yesterday