வன்னியர் 10.5 இடஒதுக்கீடு இல்லாமல் மருத்துவ கலந்தாய்வு.! வெளியானது அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


நடப்பு ஆண்டில் மருத்துவ கல்விக்கான கலந்தாய்வில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு பின்பற்றப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலையில் இருக்கும் வன்னிய  மக்களை சமூக, கல்வி நிலையில் உயர்த்த வேண்டும் என்பதற்காக வன்னியர் சங்கம், பாமகவின் 42 ஆண்டுகளாக போராட்டத்தின் பயனாகத் தான் கடந்த அதிமுக ஆட்சியில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றப்பட்டது. 

பின்னர் திமுக ஆட்சியில் வன்னியர் இட ஒதுக்கீடு நடைமுறைப் படுத்தப்பட்டது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு, வன்னியர் இட ஒதுக்கீடு செல்லாது என்று தீர்ப்பளித்ததுடன், அதனடிப்படையில் செய்யப்பட்ட மாணவர் சேர்க்கைகளையும், அரசு பணி நியமனங்களையும் ரத்து செய்யும்படியும் ஆணையிட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து எனது சார்பிலும், பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ்நாடு அரசு சார்பிலும் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நீதியரசர் நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வின் முன் இன்று விசாரணைக்கு வந்தன. 

இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து வாதிட்ட மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்கி, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பட்டியலில் புதிய சாதிகளை சேர்ப்பதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் வழங்கி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட 105 ஆவது திருத்தத்தை கணக்கில் கொள்ளாமல், 102&ஆவது திருத்தத்தை மட்டுமே கணக்கில் கொண்டு சென்னை உயர்நீதிமன்றம் இட ஒதுக்கீட்டை ரத்து செய்திருப்பதாகவும், இது  தவறு என்றும் எடுத்துரைத்தார். 

அதை ஏற்றுக் கொண்ட நீதியரசர் நாகேஸ்வரராவ், ‘‘இந்த விஷயத்தில் நான் உங்கள் நிலைப்பாட்டுக்கு ஆதரவாகத் தான் இருக்கிறேன்’’ என்று தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்பட வேண்டியிருப்பதால், அதிலும் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு வசதியாக சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் நீதியரசர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. 

அதைக் கேட்ட நீதியரசர் நாகேஸ்வர ராவ், இந்த வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க தயாராக இருப்பதாகவும், இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டு, மாணவர் சேர்க்கையிலும், பணி நியமனங்களிலும் வன்னியர் இட ஒதுக்கீட்டை  கடைபிடிக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தொடக்கத்தில் அளித்த இடைக்கால உத்தரவை நீட்டிப்பதாக தெரிவித்தார். 

அதற்கு எதிர்த்தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததாலும், சக நீதிபதிகள் மாற்று யோசனை தெரிவித்ததாலும் அதை மாற்றிக் கொண்ட நீதியரசர், ‘‘தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தின்படி இதுவரை மேற்கொள்ளப்பட்ட மாணவர் சேர்க்கை மற்றும் அரசு பணி நியமனங்களை ரத்து செய்ய முடியாது; இனி நடைபெறும் மாணவர் சேர்க்கை, பணி நியமனங்களில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தக்கூடாது’’ என்றும் தெளிவுபடுத்தினார்.

இந்நிலையில், தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு தொடர்பான அறிவிப்பு இன்று காலை வெளியிடப்பட்டது. ஏற்கனவே தமிழகம் முழுவதும் அரசு சார்பில் உள்ள 25 மருத்துவ கல்லூரிகள் மற்றும் புதிய 11 மருத்துவ கல்லூரிகள், அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளை படிப்பதற்கான இணையதள விண்ணப்பங்கள் பெறுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த அறிவிப்பில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு குறித்து எந்தவித அறிவிப்பும் இடம்பெறவில்லை. உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நிலுவையில் இருப்பதால், நடப்பாண்டில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை பின்பற்றப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MBBS Counseling without vanniyar reservation


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->