அதிகார மோதலா? உட்கட்சி பூசலா? பின்னடைவை சந்திக்கும் மதுரை திமுக! நல்லவேளை அண்ணன் பேரு அடிபடல!
madurai dmk some politically issue
முன்னாள் முதல்வர் அண்ணாவின் 114வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு முதல்வரின் காலை உணவுத் திட்ட தொடக்க விழா மதுரை கீழ் அண்ணாதோப்பு மாநகராட்சி ஆதிமூலம் தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.
இவ்விழாவில் அமைச்சர்கள், பெ.கீதா ஜீவன், கே.என்.நேரு, பெரியகருப்பன், கே.ஆர்.பெரியகருப்பன், பி.மூர்த்தி, பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டவர்களும், மதுரை மக்களவை தொகுதி எம்.பி.சு.வெங்கடேசன், மேயர் இந்திராணி, ஆட்சியர் அனீஸ் சேகர், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜித் சிங், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
கவுன்சிலருக்கு சேர் இல்லை ::
இவ்விழா நடைப்பெற்ற தொடக்கப்பள்ளி வளாகமானது மிக குறுகலாக இருந்ததால், முக்கிய நிர்வாகிகள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மட்டுமே அமர வைக்கப்பட்டனர். இதனால் அரங்கிற்கு வந்து மண்டல தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் இருக்கை இல்லாமல் அதிருப்தியடைந்தனர்.
மேலும், இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளை கவுன்சிலர்கள் கேட்டதற்கு சரியான பதில் வரவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
புறக்கணித்த ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் ::
இதன் காரணமாக, இவ்விழாவை ஆளுங்கட்சி, அதன் கூட்டணி கட்சியை சார்ந்த சில கவுன்சிலர்கள் புறக்கணித்துள்ளனர்.
இதற்கு முன்னதாகவே கடந்த வாரம் மதுரை தமுக்கம் மைதானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநாட்டு மையம் திறப்பு விழா நிகழ்ச்சி அரங்கிற்குள் கவுன்சிலர்களுக்கு அனுமதியில்லாமல், திறந்தவெளியில் கவுன்சிலர்கள் அமர வைக்கப்பட்டனர்.
அப்போது, 'எங்களை அழைத்து அவமானப்படுத்திவிட்டீர்கள்' என்று அதிகாரிகளிடம் கவுன்சிலர்கள் முறையிட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. மேலும், முதல்வரை நெருங்கவோ, பார்த்துவோ கூடாது என்பதற்காகவே மேயர் தரப்பினர் தங்களை வெளியே அமர வைத்ததாக கவுன்சிலர்கள் ஆதங்கத்தை காட்டியதாகவும் சொல்லப்படுகிறது.
பின்னடைவை சந்திக்கும் திமுக ::
ஏற்கனவே, மதுரையில் திமுகவின் முன்னாள் மற்றும் இன்னாள் அமைச்சர்கள் இடையேயான கோஷ்டி அரசியல் அவ்வப்போது வீதிக்கு வரும் நிலையில், மதுரை மாநகராட்சியில் மேயர்- கவுன்சிலர்கள் இடையே நடக்கும் இந்த அதிகார மோதல் போக்கு காரணமாக, மதுரை மாநகரத்தில் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக உடன்பிறப்புகள் முணுமுணுக்கின்றனர்.
ஊரு ரெண்டுபட்டால் 'யாருக்கோ' கொண்டாட்டாட்டம் என்பது போல, மேயருக்கும் - கவுன்சிலர்களுக்குமான இடைவெளியைப் பயன்படுத்தி, மாநகராட்சி அதிகாரிகள் தங்களின் காரியங்களை சாதித்துக் கொண்டு இருப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இந்த பஞ்சாயத்துக்கு இடையில் முதல்வரின் 'பாசமிகு' அண்ணன் பெயர் அடிபடாமல் இருப்பது ஆச்சர்யம் தான் என்று, மதுரை களம் அமைதிகொள்கிறது.
English Summary
madurai dmk some politically issue