அரசியல் செல்வாக்கு vs பொது நிலம்: தம்பிதுரை குடும்பக் கல்வி நிறுவன ஆக்கிரமிப்புகள் அகற்ற உத்தரவு!
Madras HC Orders Recovery of Encroached Land from AIADMK MP Thambidurai Educational Trust
திருவள்ளூர் மாவட்டம் கோணாம்பேடு மற்றும் நாராயணபுரம் கிராமங்களில், நீர்நிலைகளையும் அரசு நிலங்களையும் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள கல்வி நிறுவனக் கட்டடங்களை அகற்றச் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆக்கிரமிப்பின் பின்னணி:
அதிமுக மூத்த தலைவர் மற்றும் எம்பி தம்பிதுரையின் குடும்ப உறுப்பினர்கள் அறங்காவலர்களாக உள்ள செயின்ட் ஜோசப் கல்வி அறக்கட்டளை மற்றும் செயின்ட் பீட்டர்ஸ் உயர்கல்வி நிறுவனம் ஆகியவை மீது இந்தக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நில வகைப்பாடு: வருவாய் ஆவணங்களில் 'நீர்ப்பிடிப்பு' மற்றும் 'கல்லாங்குத்து' என வகைப்படுத்தப்பட்ட பொது நிலங்கள் இவை.
கட்டுமானங்கள்: கடந்த 2001-ம் ஆண்டு முதல் மாணவர் விடுதிகள், துணை மின் நிலையம் மற்றும் கல்லூரிப் பேருந்துகளுக்கான பிரத்யேகச் சாலைகள் எனப் பல கட்டுமானங்கள் இப்பகுதிகளில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளன.
நீதிமன்ற வழக்கு:
கோணாம்பேடு கிராம நலச் சங்கத் தலைவர் ஜி. கருணாநிதி தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி வளைக்கப்பட்ட இந்த நிலங்களை உடனடியாக மீட்கத் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, சுமார் 2,476 சதுர மீட்டர் பரப்பளவிலான ஆக்கிரமிப்புகளை அகற்றத் திருவள்ளூர் ஆட்சியர் தற்போது அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். கல்விப் பணி என்ற பெயரில் நீர்நிலைகளை வளைப்பவர்களுக்கு இந்தத் தீர்ப்பு ஒரு முக்கிய எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
English Summary
Madras HC Orders Recovery of Encroached Land from AIADMK MP Thambidurai Educational Trust