காங்கிரஸ் பற்றி பேச எடப்பாடிக்கு தகுதி இல்லை.. கே.எஸ் அழகிரி பதிலடி..!!
KS Alagiri responds to EPS criticism of DMK alliance
ஈரோடு மாவட்டம் வேப்பம்பாளையத்தில் அதிமுக வேட்பாளர் கே.எஸ் தென்னரசு அறிமுக கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். அதிமுகவின் கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு அதிமுக வேட்பாளர் கே.எஸ் தென்னரசுக்கு ஆதரவாக பேசினார்.
விழா மேடை பேசிய எடப்பாடி பழனிசாமி திமுக கூட்டணி கட்சிகளை அடிமை போல் நடத்துவதாக விமர்சனம் செய்திருந்தார். இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி எடப்பாடி பழனிச்சாமியின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி என்பது அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.
திமுக தலைமை காங்கிரஸ் கட்சிக்கு தொகுதியை ஒதுக்கியது போல அதிமுக ஏன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கவில்லை? இதைவிட கூட்டணி தர்மத்திற்கு உலை வைக்கிற செயல் வேறு எதுவும் இருக்க முடியாது. தமிழ் மாநில காங்கிரசை ஒரு கட்சியாகவே கருதாமல் அலட்சியப் போக்கோடு ஈரோடு கிழக்கு தொகுதியை அதிமுக அதிகரித்துக்கொண்டது.
இதுதான் அதிமுக கூட்டணி கட்சிகளை நடத்துகற விதம். இந்த நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளை திமுக அடிமைப்படுத்தி நடத்துகிறது என்று ஈரோடு கிழக்கு தொகுதி பிரச்சார கூட்டத்தில் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கின்ற வகையில் எடப்பாடி பழனிச்சாமி பேசியிருக்கிறார்.
திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளை பொறுத்தவரை மிகுந்த சுய மரியாதையோடு, சுய சிந்தனையோடு செயல்பட்டு வருகிறோம். ஆனால் அதிமுகவை பொருத்தவரை யார் காலில் விழுந்து எப்படி பதவி பெற்றார்கள் என்பதை அனைவரும் அறிவார்கள்.
இத்தகைய அடிமைத்தன அரசியல் நடத்தியவர்கள் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட மதசார்பற்ற கூட்டணி கட்சிகளை விமர்சிக்க எந்த தகுதியும் இல்லை" என தனது அறிக்கையின் வாயிலாக கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
English Summary
KS Alagiri responds to EPS criticism of DMK alliance