உலக தமிழர்களே எதிர்பார்த்த அந்த அறிவிப்பு வெளியானது.!
jallikattu DATE announce jan 14
உலக தமிழர்களே எதிர்பார்க்கும், தை பொங்கல் பண்டிகையின் முக்கிய அம்சமான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, ஜனவரி 14 அன்று அவனியாபுரத்திலும், ஜனவரி 15 அன்று பாலமேட்டிலும் மற்றும் ஜனவரி 16 அன்று அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியின்போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் மற்றும் வழிநெறிமுறைகள் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்திருப்பதாவது,
* இந்த நிகழ்ச்சிகளில் திறந்தவெளியின் மொத்த கொள்ளளவுக்கு ஏற்ப சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் 50 சதவீத அளவுக்கு மிகாமல் பார்வையாளர்கள் கலந்துகொள்ளலாம். பார்வையாளர்களை உடல் வெப்ப பரிசோதனை செய்த பின்னர் அனுமதிக்க வேண்டும்.
* ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில் மாடுபிடி வீரர்கள் 300 பேருக்கு மிகாமல் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுகிறது. எருது விடும் நிகழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மிகாமல் கலந்துகொண்டு நிகழ்ச்சி நடத்தலாம்.
* போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனைக்கூடத்தில் கொரோனா தொற்று இல்லை என்று சான்று பெற்றிருக்கவேண்டும்.
* பார்வையாளர்கள் முககவசம் அணிவதும், தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பதும் கட்டாயம்.
* ஒரு காளையுடன் ஒரு உரிமையாளர் மற்றும் நன்கு பழக்கம் உள்ள ஒரு உதவியாளரை மட்டுமே அனுமதிக்கலாம். காளையின் உரிமையாளர் மற்றும் அவருடைய உதவியாளருக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அடையாள அட்டை வழங்கப்படும். அடையாள அட்டை இல்லாத நபர்கள், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறும் வளாகத்துக்குள் நுழைய அனுமதி இல்லை.
* காளைகளை பதிவு செய்யும்போது, அந்தக் காளையின் உரிமையாளர் மற்றும் உடன் வரும் உதவியாளர் ஆகியோரும் பதிவு செய்யவேண்டும். ஜல்லிக்கட்டில் பங்குபெறும் காளைகளின் பதிவு, நிகழ்ச்சி நடைபெறுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பே முடிக்கப்படவேண்டும். காளையின் உரிமையாளர் மற்றும் உடன் வரும் உதவியாளர் கொரோனா பரிசோதனை செய்து, தொற்று இல்லை என சான்று பெற்றிருக்கவேண்டும்.
* ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்களுக்கு, நிகழ்ச்சி நடைபெறுவதற்கு 7 நாட்களுக்கு முன்பாக பதிவு செய்யப்பட்டு, மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அடையாள அட்டை வழங்கவேண்டும். அடையாள அட்டை இல்லாத நபர்களுக்கு அனுமதி இல்லை.
* அரசு அங்கீகாரம் பெற்ற ஆய்வுக்கூடங்களில் பரிசோதனை செய்து, கொரோனா தொற்று இல்லை என்று நிகழ்ச்சி நடைபெறும் 2 நாட்களுக்கு முன்பு சான்று பெற்றவர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டில் அனுமதிக்கப்படுவார்கள்.
* தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மீறுபவர்கள் ஜல்லிக்கட்டு நடைபெறும் வளாகத்தில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்.
* ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை மேற்பார்வை செய்யும் அனைத்து துறை அதிகாரிகளும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும் கொரோனா பரிசோதனை செய்து, தொற்று இல்லை என சான்று பெற்றிருக்கவேண்டும்." என்று தமிழக அரசு அந்த அரசாணையில் தெரிவித்துள்ளது.
English Summary
jallikattu DATE announce jan 14