பச்சை பொய் பேசுகிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி! மின்கட்டண உயர்வுக்கு வலுக்கும் எதிர்ப்பு!
GK Nagaraj slams Electricity minister senthil balaji
ஈரோடு தெற்கு மாவட்டம் சூரம்பட்டி நால் ரோட்டில் பாஜக சார்பில் மின்கட்டண உயர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டம், மாவட்ட தலைவர் S.T.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. பாஜக விவசாய அணி மாநில தலைவர் G.K. நாகராஜ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய நாகராஜ், "திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக சொத்துவரி, குடிநீர் கட்டண உயர்வு ஆகியவற்றை உயர்த்தி தற்போது மின்கட்டணத்தை உயர்த்தியுள்ளது. நடப்பு ஆண்டில் பட்ஜெட் தாக்கல் செய்தபோது வரியில்லாத பட்ஜெட் என்று மார்தட்டிய தமிழக அரசு இப்போது மின்கட்டணத்தையும் உயர்த்தி மக்களை விழிபிதுங்கச் செய்கிறது. கொரோனா பாதிப்பிலிருந்து மக்கள் விடுபடுவதற்கு முன்பாக பலருக்கு வேலை பறிபோய்விட்டது. வருமானம் பாதிக்கப்பட்டுவிட்டது. இப்படி தொடர்ச்சியாக அடி கொடுத்து விலைவாசியை உயர்த்தினால் என்ன செய்வார்கள் தமிழக மக்கள்?
திராவிட மாடல் என்பது மக்களை ஏமாற்றுவதற்கான மாடல். சுயசார்பு என்று பெருமைபேசுகின்ற முதல்வர் முதலில் தமிழகத்தில் மின்உற்பத்தியை அதிகப்படுத்தி மின்சாரத்துறையை சீரமைக்க வேண்டும். 17.07.2022-ம் தேதியின் கணக்கீட்டில் தமிழகத்தில் மொத்த மின்சாரப்பயன்பாடு 26,681 மில்லியன் யூனிட். தமிழக அரசு உற்பத்தி செய்தது 8,215 மில்லியன் யூனிட். தனியார் கொள்முதல் 2,560 மில்லியன் யூனிட். மத்திய அரசின் தொகுப்பிலிருந்து பெற்றது 15,905 மில்லியன் யூனிட். எங்கே தமிழகத்தின் சுயசார்பு?
மத்திய அரசு மற்றும் தனியார் நிறுவனத்திற்கு தரவேண்டிய மின்சார பாக்கி ரூ.26,095கோடி.எல்லா நிறுவனங்களையும் ஆவின் உட்பட போக்குவரத்துத்துறை உட்பட எல்லா நிறுவனங்களையும் நிர்வாகத்திறமையின்மையால் கடனில் தள்ளாட வைத்திருக்கிறது தமிழக அரசு.
திராவிடியன் மாடல் அரசு குஜராத்தை சென்று பார்வையிட வேண்டும் எனவும், 2001-ல் குஜராத்தில் மோடி அவர்கள் முதல்வராக பதவியேற்றபோது, மின்சாரத்துறையின் கடன் ரூ.2300 கோடி. ஆறு ஆண்டுகளில் கடன் அடைக்கப்பட்டு 600 கோடி இலாபம் ஈட்டியது மின்துறை. பின்பு 16 மாநிலங்களுக்கு மின்சாரம் வழங்கி மின் உற்பத்தியில் முதன்மையான மாநிலமாக திகழ்கிறது குஜராத். நர்மதை கால்வாயின் மீது 480 கி.மீக்கு சூரிய மின்மேற்கூரை அமைத்து மின்சாரம் தயாரிக்கிறது, நீர் ஆவியாதலை தடுக்கிறது. இது உலகிற்கே சிறந்த மாடலாக உள்ளது.
மின்வாரியத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பச்சைப்பொய் பேசுகிறார். மின்சாரத்துறையை இலாபகரமாக இயக்க வழிகாட்டுகிறது மத்திய அரசு. அத்துடன் நிதியும் கொடுக்கிறது. ஆனால் அதை பின்பற்றாமல் ஊழல் மற்றும் முறைகேட்டிற்காக மின்துறையை சீரமைக்க மறுக்கிறது தமிழக அரசு. ஸ்மார்ட் மீட்டர் மாட்ட மறுக்கிறது. மத்திய அரசின் மீது வீண் பழி போடுகிறது தொலைநோக்கு பார்வையில்லா திமுக அரசு. மின்கட்டண உயர்வை நிறுத்தாவிட்டால் பாஜகவின் போராட்டம் மக்கள் போராட்டமாக உருவெடுக்கும்" என பேசினார்.
English Summary
GK Nagaraj slams Electricity minister senthil balaji