யாதும் ஊரே… சமத்துவமே அரசியல்! - திமுக கூட்டணி வெற்றிக்காக சமத்துவ நடைபயணத்தை தொடங்கிய வைகோ...!
Every place our home Equality our politics Vaiko begins equality march victory DMK alliance
சமத்துவ நடைபயணத்தின் தொடக்க விழாவில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உரையாற்றியபோது, திராவிட இயக்கத்தின் வரலாறும், போராட்டப் பயணங்களும் நினைவுகூரப்பட்டன.
“பொங்கி ஓடும் பொன்னி ஆற்றங்கரையில், மலைக்கோட்டை மாநகரமான திருச்சி – உறையூரில், 1938-ம் ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி, அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரிசாமியின் நடைபயணத்தை பெரியார், மறைமலை அடிகளார், சோமசுந்தரம் பாரதியார், மணவை திருமலைச்சாமி போன்ற பெருமக்கள் தொடங்கி வைத்து சிறப்பித்தனர்.

அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நடைபயணத்தின் தொடர்ச்சியாக, எனது சமத்துவ நடைபயணத்தையும் இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்” என்று வைகோ நினைவூட்டினார்.
மேலும், 1982-ம் ஆண்டு மார்ச் 15-ம் தேதி மதுரையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தபின், திருச்செந்தூரில் வைரவேல் காணாமல் போன விவகாரம், ‘தூக்கில் தொங்குகிறார் சுப்ரமணிய பிள்ளை’ என்ற சம்பவம் போன்றவற்றில் அது தற்கொலை அல்ல, படுகொலை என நீதிகேட்டு, கலைஞர் மதுரையிலிருந்து நடைபயணம் மேற்கொண்ட வரலாற்றையும் அவர் எடுத்துரைத்தார்.
108 திருப்பதிகளில் ஒன்றான தென் திருப்பேரையில் ஆபரணங்கள் திருடப்பட்டபோது, கலைஞர் நேரில் வந்து மக்களை சந்தித்து காவல்துறைக்கு அழுத்தம் கொடுத்ததையும், தன்னை அழைத்து நடைபயணமாக வந்து மனு அளிக்கச் சொன்னதையும் வைகோ நினைவுகூர்ந்தார்.
அதன் தொடர்ச்சியாக, 1986-ம் ஆண்டில் திருநெல்வேலி கலெக்டர் அலுவலகம் வரை மக்களுடன் இணைந்து தனது முதல் நடைபயணத்தை மேற்கொண்டதாகவும் தெரிவித்தார்.
அதன்பின், 1994-ல் குமரியிலிருந்து சென்னை வரை 1,600 கிலோ மீட்டர் தூரம் அன்றைய அ.தி.மு.க. ஆட்சியின் ஊழல்களுக்கு எதிராக நடைபயணம், 2002-ல் நதிகள் இணைப்புக்காக மாவட்டங்கள் தோறும் பயணம், நல்லிணக்கம் வளர நடைபயணம், முல்லைப் பெரியாறு அணையை காக்க மூன்று முறை நடைபயணம், 2018-ல் மதுரையிலிருந்து இடுக்கி வரை பென்னிகுயிக் அணைகளை பாதுகாக்க நடைபயணம் என பல்வேறு போராட்டப் பயணங்களை மேற்கொண்டதாக அவர் பட்டியலிட்டார்.
இந்தப் பயணங்களில் பலவற்றில், இன்றைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனக்கு துணை நின்றார் என்றும் வைகோ குறிப்பிட்டார். “யாதும் ஊரே, யாவரும் கேளீர்; பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற திருக்குறளின் அடிப்படையில், தமிழகத்தில் மதப் பாகுபாடுகளுக்கு இடமில்லை என்பதை உறுதிப்படுத்தவும், சமத்துவ உணர்வை மக்களிடம் விதைக்கவும் இந்த நடைபயணத்தை தொடங்கியுள்ளோம் என்றார்.
இந்த பயணத்தின் போது மக்களை சந்திக்கும் இடமெல்லாம், இந்த ‘பொற்கால ஆட்சி’ தொடர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பேன். வரும் தேர்தலில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு அளித்து வெற்றிபெறச் செய்யுங்கள் என மக்களிடம் வலியுறுத்துவேன்.“வெல்க திராவிடம்… வெல்க திராவிடம்” என முழங்கியபடி வைகோ தனது உரையை நிறைவு செய்தார்.
English Summary
Every place our home Equality our politics Vaiko begins equality march victory DMK alliance