ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் களமிறங்கிய 4 சுயேச்சை வேட்பாளர்கள்!
Erode By Election 1st day Nomination
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் மீனாட்சிசுந்தரனார் சாலையில் அமைந்துள்ள ஈரோடு மாநகராட்சியின் பிரதான கட்டடத்தில், ஆணையர் அறையில் நடைபெறுகிறது.
இன்று காலை முதல் வேட்பு மனுத்தாக்கல் துவங்கிய நிலையில், முதல் நாளான இன்று சுயேச்சை வேட்பாளர்கள் 4 பேர் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அரசியல் கட்சியினர் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
இதில், சேலம் மாவட்டம், மேட்டூர் பகுதியை சேர்ந்த 'தேர்தல் மன்னன்' என்று அழைக்கப்படும் பத்மராஜன் (வயது 65) வேட்பு மனுவை தாக்கல் செய்தார். பத்மராஜனுக்கு இது 233 வது வேட்பு மனு ஆகும்.
தொடர்ந்து கோவை, சுந்தராபுரத்தை சேர்ந்த சுய தொழில் செய்து வரும் நூர்முகம்மது (வயது 63) என்பவரும் வேட்புமனு தாக்கல் செய்தார். மக்களுக்கு நாய் போல் உழைப்பேன், செருப்பு போல் தேய்வேன் என்பதை சுட்டிக்காட்டும் விதமாக, நூர்முகம்மது தனது கழுத்தில் செருப்பு மாலை அணிந்து வந்து வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
அவரை தொடர்ந்து நாமக்கல், மேற்கு பாலப்பட்டியை சேர்ந்த காந்தியவாதி ரமேஷ் (வயது 42) என்பவர் கையில் தராசுடன் காந்தி போல உடையணிந்து மனுத்தாக்கல் செய்தார். மேலும், வேட்புமனு கட்டணமான 10000 ரூபாய்க்கு 10 ருபாய் நாணயங்களை கொண்டு வந்தார்.
திருப்பூர் மாவட்டம், அவினாசி அருகே தேவராயன்பாளையத்தை சேர்ந்த ராமு என்பவற்றின் மனைவி தனலட்சுமி (வயது 41) என்பவர் மனுத்தாக்கல் செய்தார். இப்படியாக முதலான இன்று 4 பேர் மட்டும் மனுத்தாக்கல் செய்தனர். 6 பேரின் வேட்பு மனுவில் குறைபாடு இருந்ததால் திருப்பி அனுப்பப்பட்டனர்.
English Summary
Erode By Election 1st day Nomination