மணிப்பூர் சம்பவம் நாட்டிற்கே அவமானம்! எடப்பாடி பழனிச்சாமி ட்விட்!!
EPS tweet that Manipur incident is shame for nation
மணிப்பூர் மாநிலத்தில் கலந்த மே மாதம் கூகி இனத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை ஏராளமான ஆண்கள் நிர்வாணமாக்கி இழுத்துச் செல்லும் காணொளி சமூக வலைதளங்களில் வெளியானது. அந்த பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் 4 பேரை மணிப்பூர் போலீசார் கைது செய்தனர். மேலும் பலரை தேடி வருவதாக மணிப்பூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும் தமிழ்நாடு அரசின் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "மணிப்பூர் மாநிலத்தில் பெண்களை இழிவுபடுத்தி இரக்கமற்ற வகையில் நடந்திருக்கும் கொடிய சம்பவத்திற்கு எனது கடும் கண்டனங்கள்.
நாட்டிற்கே தலைகுனிவை ஏற்படுத்தும் வகையில் குற்றச் செயலில் ஈடுபட்டவர்களுக்கு உடனடியாக கடும் தண்டனை வழங்க வேண்டும். இதுபோன்ற இழிசெயலை இனி யாரும் செய்யத் துணியாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என மணிப்பூர் மாநில முதல்வரை வலியுறுத்தியுள்ளார்.
English Summary
EPS tweet that Manipur incident is shame for nation