வன்னியர் உள்ஒதுக்கீடு விவகாரம்! நான் எச்சரிக்கை விடவில்லை, அன்பாகத்தான் சொல்கிறேன் - அன்புமணி இராமதாஸ்!
Dr Anbumani Ramadoss Say About Vanniyar Reservation thiruvannamalai
திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாக பிரிக்க கோரி பாமகவின் ஆர்ப்பாட்டம் இன்று திருவண்ணாமலையில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய அக்கட்சியின் தலைவர் அன்புமணி இராமதாஸ் பேசுகையில், "வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக நான்கு முறை நான் முதலமைச்சரை நேரில் சந்தித்து உள்ளேன். மருத்துவர் அய்யா அவர்கள் ஆறு முறை தமிழக முதல்வரிடம் தொலைபேசியில் பேசி இருக்கிறார். நம்முடைய சட்டமன்ற உறுப்பினர்கள் பேசியிருக்கிறார்கள். அதிகாரிகளுடனும் பேசி இருக்கிறோம்.
வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுக்க எந்த தடையும் உச்சநீதிமன்றம் விதிக்கவில்லை. சட்டத்திற்கான நியாயமான காரணங்களை மட்டுமே அவர்கள் கேட்கிறார்கள். இதற்குண்டான தரவுகளை எடுப்பதற்கு ஆறு மணி நேரம் தான் ஆகும். ஆனால் அதை எடுப்பதற்கு இவர்களுக்கு ஒரு வருடமாக மனது வரவில்லை.
பிற்படுத்தப்பட்ட ஆணையம் ஒரு துரும்பை எடுத்து வைக்கவில்லை. கடந்த ஆண்டு இவர்கள் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுத்து சட்டம் இயற்றுவார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. இந்த ஆண்டு அந்த நம்பிக்கை குறைந்து விட்டது. ஆனாலும் தமிழக முதல்வர் அவர்களை பாசத்தோடு, அன்பாக, பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். இன்னும் ஒரு மாதத்திற்குள் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீட்டை தமிழக சட்டமன்றத்தில் சட்டமாக கொண்டு வாருங்கள். இது ஒரு சமூக நீதிப் பிரச்சனை. சாதி பிரச்சனை கிடையாது.
திமுக என்றால் சமூகநீதி என்று நீங்கள் தான் கூறுகிறீர்கள். இப்படியான ஒரு சமூக நீதிப் பிரச்சினையை உங்களால் தீர்க்க முடியவில்லை என்றால், சமூக நீதிக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம் என்று மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்து விடுவார்கள். அது மட்டுமில்லை இது ஒட்டு மொத்த தமிழ்நாட்டின் வளர்ச்சி பிரச்சனை. வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீட்டை நிச்சயமாக கொண்டு வாருங்கள் என்று வலியுறுத்துகிறோம்.
நான் செல்லும் இடமெல்லாம் என்னை சந்திக்கும் இளைஞர்கள், எப்போது வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் என்ன போராட்டம் அறிவித்தாலும் நாங்கள் வருகிறோம் என்று கோபத்துடன் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் அது அவர்களுடைய உரிமை பிரச்சினை.
இந்த ஒரு மாதத்தில் சட்டம் கொண்டவரவில்லை என்றால், அடுத்தடுத்த கடுமையான போராட்டங்களை தமிழகம் சந்திக்கும். இதை நான் எச்சரிக்கையாக சொல்லவில்லை. அன்பாகத்தான் சொல்கிறேன். போராட்டம் என்பது பிறகு தானாகவே நடக்கும். அதை என்னால் கட்டுப்படுத்த முடியாது. வேறு விதமான போராட்டமாக இருக்கும். ஏனென்றால் இது உரிமை போராட்டம். வாழ்க்கை போராட்டம் என்று சொல்ல நான் கடமை பட்டிருக்கிறேன்" என அன்புமணி பேசினார்.
English Summary
Dr Anbumani Ramadoss Say About Vanniyar Reservation thiruvannamalai