இழந்த கே.ஜி.எஃப்-ஐ கைப்பற்றுவோம்.. ராஜேந்திரனுக்கு பா.ரஞ்சித் ஆதரவு..!!
Director Ranjith supports Republican Party of India candidate
கர்நாடக மாநில சட்டப்பேரவை பொது தேர்தல் வரும் மே 10-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் கே.ஜி.எஃப் எனப்படும் கோலார் தங்கவயல் தொகுதியில் இந்திய குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் எம்எல்ஏ ராஜேந்திரன் என்பவர் போட்டியிடுகிறார். கே.ஜி.எஃப் தொகுதி தமிழர்கள் அதிகம் வசிக்கும் தொகுதி என்பதால் தமிழில் பேசி வாக்காளர்களை ஈர்த்து வருகிறார்.
காங்கிரஸ் மற்றும் பாஜக சார்பில் போட்டியிடுவோர் வெளியூரைச் சேர்ந்தவர்கள் வேட்பாளர்களாக களம் இறக்கப்பட்டுள்ளனர். இதனால் எஸ்.ராஜேந்திரன் 'மண்ணின் மைந்தன்' என்ற முழக்கத்தை கையில் எடுத்துள்ளார். கோலார் தங்கவயலில் உள்ள ராபர்ட்சன் பேட்டை, மாரிக்குப்பம், சாம்பியன் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் தமிழர்களிடம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.
இந்நிலையில் இயக்குநர் பா.ரஞ்சித் கோலார் தங்கவயல் பகுதியில் நடிகர் விக்ரமை வைத்து 'தங்கலான்' என்ற படத்தை இயக்கி வருகிறார். அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்த பா.ரஞ்சித் எஸ்.ராஜேந்திரனை கடந்த ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பு குறித்து பேசிய இயக்குனர் பா.ரஞ்சித் ''கோலார் தங்கவயல் தொகுதி இந்தியக் குடியரசு கட்சிக்கு சொந்தமான தொகுதி. இந்திய குடியரசு கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் பல முறை வெற்றிப் பெற்றுள்ளனர். ஆனால் தற்போது இந்தத் தொகுதியை இந்தியக் குடியரசு கட்சி இழந்துள்ளது. இழந்தத் தொகுதியை மீண்டும் கைப்பற்றும் சூழ்நிலை தற்போது அமைந்துள்ளது. கே.ஜி.எஃப் தொகுதியில் தமிழர்கள் தங்களின் பலத்தை மீண்டும் நிரூபிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. எனவே கே.ஜி.எஃப் மக்கள் ராஜேந்திரனை தேர்தலில் வெற்றி பெற வைக்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.
English Summary
Director Ranjith supports Republican Party of India candidate