தி.மு.க.,வுக்குள் கோஷ்ட்டி மோதல்., நடுத்தெருவுக்கு வந்த பஞ்சாயத்து!
Cuddalore dmk counselor clash
இன்று காலை கடலூர் மாநகராட்சி கூட்டம் மேயர் சுந்தரி ராஜா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்,
"மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை வருகிற 15ஆம் தேதி முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். தொடர்ந்து மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.
இதன் காரணமாக அனைத்து கவுன்சிலர்களும், தங்கள் வார்டு பகுதியில் உள்ள பள்ளி வளாகத்தில், இந்த திட்டம் செயல்படுவதற்கு என்னென்ன பணிகள் மேற்கொண்டு வருகிறார்கள் என்பதை தனி கவனம் செலுத்த வேண்டும்" என்று அறிவுறுத்தப்பட்டது.
இதற்கிடையே இந்த மாநகராட்சி கூட்டத்தில் இருந்து திமுக கவுன்சிலர்கள் சிலர், தங்கள் வார்டுகளை மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக கூறி கோஷம் எழுப்பினர். மேலும், எங்களுடைய வார்டு பகுதிக்குள் எந்த விதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுப்பதில்லை என்றும், அரசு நிகழ்ச்சி ஏதேனும் நடைபெற்றால் கூட தகவல் தெரிவிக்கப்படுவதில்லை என்றும் குற்றம் சாட்டினர்.
அப்போது கூட்டத்தில் பங்கேற்ற திமுகவை சேர்ந்த சில கவுன்சிலர்கள் திடீரென, "அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அறிவுறுத்தலின் பெயரில், மேயர் சுந்தரி ராஜா தலைமையில் மாநகராட்சி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது" என்று பதில் அளித்தனர்.
இதற்க்கு குற்றம் சாட்டிய திமுக கவுன்சிலர்கள், "எங்களுடைய கேள்விக்கு மேயர் மற்றும் அதிகாரிகள் தான் பதில் தர வேண்டுமே தவிர, நீங்கள் அல்ல" என்று ஆவேசமாக பதில் அளித்தனர்.
இதனால் திமுக கவுன்சிலர்கள் இரண்டு தரப்புகளாக பிரிந்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது மேயர் அனைவரையும் அமைதி காக்க முயற்சித்தார். ஆனால் அதற்குள் திமுக கவுன்சிலர்கள் இடையே மோதலாக மாறியது.
தொடர்ந்து இருதரப்பு கவுன்சிலர்களும் பாரதி சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட திமுக கவுன்சிலர்களை அப்புறப்படுத்தினர்.
இதற்கிடையே வெளியான தகவலின் படி, கடலூர் மாநகராட்சி கூட்டத்தில் ஏற்பட்ட பிரச்சனைக்கு காரணம், அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் திமுக எம்எல்ஏ., ஐயப்பன் ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்தது என்று சொல்லப்படுகிறது.
அண்மையில் எம்.எல்.ஏ., ஐயப்பன் பாஜகவுக்கு தாவ உள்ளதாக வெளியான தகவல் அவர் திமுகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். பின்னர், மீண்டும் திமுகவில் இணைந்து கொணடார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Cuddalore dmk counselor clash