கரூர்: தவெக விஜய் பிரசார வாகன CCTV காட்சிகள் சிபிஐ வசம் ஒப்படைப்பு!
CBI TVK Vijay karur case
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27 அன்று நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தை விசாரித்து வரும் சிபிஐ, இதுவரை 300க்கும் மேற்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி, அக்டோபர் 30 முதல் தொடர் விசாரணை நடத்தி வருகிறது.
சம்பவம் நடந்த இடமான வேலுசாமிபுரம் சாலை பகுதியில், சிபிஐ 3D லேசர் ஸ்கேனர் கருவி மூலம் 2 நாட்கள் அளவீடு பணிகளை மேற்கொண்டது. அத்துடன் அருகிலிருந்த கடைகள், அலுவலகங்கள், நிறுவனங்களிலிருந்து சிசிடிவி காட்சிகளை சேகரித்ததுடன், சாட்சிகளிடம் வாக்குமூலங்களும் பெற்றது.
நவம்பர் 2 அன்று சிபிஐ குழு கரூர் காமராஜபுரத்தில் வசிக்கும் ராம்குமாரை தேடி விசாரணை மேற்கொண்டது. பின்னர் சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்குச் சென்று, பிரச்சார வாகன சிசிடிவி காட்சிகள் மற்றும் கூட்டத்தில் பங்கேற்றவர்களின் விவரங்களை கோரி சம்மன் வழங்கியது. இதற்கு 3 நாட்களில் தேவையான தகவல்களை வழங்குவதாக தவெக நிர்வாகி நிர்மல்குமார் தெரிவித்திருந்தார்.
இதேவேளை, சிபிஐ கடந்த 3 நாட்களாக கரூர் சுற்றுலா மாளிகையில் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டவர்களை விசாரித்து வருகிறது. சிலரிடம் தொடர்ச்சியாக 3 நாட்களாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில், இன்று தவெக வழக்கறிஞர் மற்றும் நிர்வாகிகள் மூவர் கரூர் சுற்றுலா மாளிகையில் ஆஜராகி, பிரச்சார வாகன சிசிடிவி பதிவுகள் மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களின் விவரங்கள் அடங்கிய ஆவணங்களை சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதன் மூலம் விசாரணை மேலும் தீவிரமடைந்துள்ளது.