ஒரு டீ குடிக்கக் கூட யோசிக்க வைக்கலாமா...? சிலிண்டர் விலை உயர்வால் மக்கள் அவதி...ஜூன் 4-ல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்
Can you even make me think about drinking cup tea People suffering due increase cylinder prices Communist Party India protest June 4
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்காசிய நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் உலகளாவிய பொருளாதாரத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கைகள் காரணமாக அப்பகுதியில் பதற்றமான சூழல் நீடித்து வருகிறது.
இதன் விளைவாக ஹார்முஸ் நீரிணை வழியிலான சரக்குக் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பல நாடுகளில் எரிபொருள் விநியோகச் சங்கிலியில் சிக்கல்கள் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த சூழலை காரணமாகக் காட்டி இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைகள் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதாகவும், குறிப்பாக வணிக நிறுவனங்களுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை கடுமையாக பாதித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.46 அதிகரிக்கப்பட்டு ரூ.3,283 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு உணவகங்கள், தேநீர் கடைகள் மற்றும் சிறு வணிக நிறுவனங்களின் செயல்பாடுகளில் பெரும் நெருக்கடியை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் தாக்கமாக ஒரு கோப்பை தேநீரின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதுடன், அன்றாட உணவுப் பொருட்களின் விலையும் பொதுமக்களை சிரமத்திற்கு உள்ளாக்கும் வகையில் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த விலைவாசி ஏற்றத்துக்கு ஒன்றிய அரசின் பொருளாதார அணுகுமுறையும், தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்கு சாதகமாக அமைந்துள்ள விலை நிர்ணய நடைமுறைகளும், அதிக வரிச்சுமைகளும் முக்கிய காரணங்களாக உள்ளதாக அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
எரிபொருள் மற்றும் வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், இந்த சுமையை பொதுமக்கள் மற்றும் சிறு வணிகர்கள் மீது திணிக்கக் கூடாது என்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளது.
மேலும், இந்த கோரிக்கைகளை முன்வைத்தும், ஒன்றிய பாஜக அரசின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், வருகிற ஜூன் 4-ந் தேதி வியாழக்கிழமை தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படவுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Can you even make me think about drinking cup tea People suffering due increase cylinder prices Communist Party India protest June 4