ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளுங்கள்... திமுகவுக்கு எச்.ராஜா எச்சரிக்கை..!!
BJP HRaja warns DMK retain the Tamil Nadu govt
திருச்சியில் பாஜக சார்பில் நடைபெற்ற நம்ம ஊரு மோடி பொங்கல் திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா நேற்று பரிசு வழங்கினார். அப்பொழுது பேசிய அவர் "தமிழக அரசு வழங்கிய பொய் உரையை ஆளுநரால் எப்படி படிக்க முடியும்..?? அதனால் ஆளுநரின் நாகரீகத்தை பாராட்ட வேண்டும். கடந்த ஜனவரி 7ஆம் தேதியே என்னால் பொய்யான புகழுரைகளை படிக்க முடியாது என ஆளுநர் கூறியுள்ளார். அரசு தரப்பில் ஆளுநர் உரை ஆச்சுக்கு போய்விட்டதால் நீங்கள் தப்பு என நினைப்பதை தவிர்க்கலாம் என தெரிவித்துள்ளனர்.
ஆனால் ஆர்.எஸ் பாரதி போன்ற அநாகரீக பேர்வழிகளுக்கு அரசியல் சட்டம் தெரிந்து இருக்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டம் 356 ஐ பயன்படுத்தி ஒரு மாநில அரசை கலைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு மாநிலத்தின் குறிப்பிட்ட பகுதியை மத்திய அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியும். அதற்கு சட்டத்தில் இடம் உள்ளது. அதிமுகவில் இருந்த பொழுது கருணாநிதியையும் அவரது குடும்பத்தையும் மிகக் கேவலமாக சட்டமன்றத்தில் பேசிவிட்டு தற்பொழுது திமுகவில் அமைச்சராக இருக்கும் சேகர்பாபுவை ஏவி விட்டால் என்னவாகும் என ஆர்.எஸ் பாரதி பேசியுள்ளார்.
தமிழக முதல்வரின் பதவிக்கு உலை வைக்க முடிவு செய்துவிட்டு, இப்பொழுது சேகர்பாபுவின் அரசியல் வாழ்க்கையை முடிக்க நினைக்கிறார்கள். திமுகவினர் இந்த விவகாரத்தை இதோடு விட்டு விட்டால் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முடியும். எனவே தமிழக ஆளுநரை பற்றி யாரும் பேச வேண்டாம் என நான் எச்சரிக்கிறேன்.
திமுகவினரின் தூண்டுதலால் தமிழக ஆளுநருக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்துகின்றனர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு விவசாயிகள் போராட்டம், #GoBackModi போன்றவற்றை திமுகவினர் நடத்தினர். ஆனால் அதனையும் மீறி பாஜக இந்தியா முழுவதும் 303 தொகுதிகளை கைப்பற்றி மோடி தலைமையில் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது" என பேசி உள்ளார்.
English Summary
BJP HRaja warns DMK retain the Tamil Nadu govt