6 தொகுதிகளிலும் அதிமுகவே போட்டி; கூட்டணிக்கு இடமில்லை – இடைத்தேர்தலை ‘வாழ்வா, சாவா’ போராட்டமாக மாற்றிய எடப்பாடி பழனிசாமி!
AIADMK to contest all 6 constituencies Edappadi Palaniswami turns the byelection into a do or die battle
தமிழகத்தில் காலியாக உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து தொகுதிகளிலும் அதிமுக நேரடியாக களமிறங்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் நடைபெற்ற அதிமுக உட்கட்சி ஆலோசனைக் கூட்டத்தில், கட்சியின் சில மூத்த நிர்வாகிகள் மாற்று யோசனையை முன்வைத்ததாக கூறப்படுகிறது. அதன்படி, 6 தொகுதிகளில் 3 தொகுதிகளில் அதிமுக போட்டியிட்டு, மீதமுள்ள 3 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளான பாமக, அமமுக, பாஜக ஆகியவற்றுக்கு ஒதுக்கலாம் என பரிந்துரைக்கப்பட்டது. இதன் மூலம் கூட்டணியை வலுப்படுத்தி, எதிர்கால தேர்தல்களிலும் அதன் பலனைப் பெற முடியும் என அவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
ஆனால் இந்த ‘3+3’ யோசனையை எடப்பாடி பழனிசாமி ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. தற்போதைய அரசியல் சூழலில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடம் விட்டுக்கொடுப்பது அதிமுகவின் அரசியல் நிலையை பலவீனப்படுத்தும் என அவர் கருதுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, கடந்த சில வாரங்களாக அதிமுக நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்து வருவது கட்சித் தலைமையை கவலையடையச் செய்துள்ளது. இந்த நிலையை மாற்ற வேண்டுமெனில், இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிபெறுவது அவசியம் என்ற முடிவுக்கு எடப்பாடி பழனிசாமி வந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 6 தொகுதிகளில் 5 தொகுதிகளில் கடந்த தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலை சின்னமே வெற்றி பெற்றிருந்தது. எனவே, அந்த தொகுதிகளில் மீண்டும் அதிமுக நேரடியாக போட்டியிடுவது கட்சியின் உரிமையும் அரசியல் அவசியமும் என எடப்பாடி பழனிசாமி கருதுகிறார்.
இந்த இடைத்தேர்தலில் குறைந்தபட்சம் 2 தொகுதிகளிலாவது வெற்றி பெற்றால், தவெகவுக்கு செல்ல நினைக்கும் சில அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யக்கூடும் என்ற கணக்கும் அதிமுக தலைமையிடம் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக, 6 தொகுதிகளிலும் அதிமுக சார்பில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்களை அடையாளம் காணும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இடைத்தேர்தலை அதிமுக தனது அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ‘வாழ்வா, சாவா’ போராட்டமாகவே பார்க்கிறது. இதனால், குறைந்தபட்சம் சில தொகுதிகளிலாவது வெற்றி பெற்று கட்சியின் வலிமையை நிரூபிக்க வேண்டும் என்ற முனைப்பில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.
English Summary
AIADMK to contest all 6 constituencies Edappadi Palaniswami turns the byelection into a do or die battle