இந்து மக்கள் கட்சியினரின் போராட்டம் எதிரொலி.! தமிழகத்தின் இந்த ஒரு பகுதியில் மட்டும் 144 தடை.!
144 in malaikottai
திண்டுக்கல்: மலைக்கோட்டை பகுதியில் 144 தடை உத்தரவை பிறப்பித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.
திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் மலைக்கோட்டை அமைந்துள்ளது. இந்த மலைக்கோட்டைக்கு வரலாற்றுச் சிறப்புகள் உள்ளது. இந்த மலைக்கோட்டையின் உச்சியில் அபிராமி அம்மன் கோயில் உள்ளது.
இந்த கோவிலில் சாமி சிலைகள் எதுவும் இல்லை, இதனால் அந்த கோவிலில் வழிபாடுகள் எதுவும் நடத்தப் படுவதில்லை. இந்த கோவில் தற்போது தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளதால், சுற்றுலா பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்து மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள் மலைக்கோட்டை அபிராமி அம்மன் கோவிலில், அபிராமி அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்தனர். ஆனால் தொல்லியல் துறையினர் அந்த சிலையை எடுத்துச் சென்றுவிட்டனர்.
மேலும், வருடந்தோறும் வரும் கார்த்தியை தினங்களில் தீபம் ஏற்ற இந்து மக்கள் கட்சியினர் முயற்சி செய்து வருகின்றனர். இதேபோல் மற்றொரு மதத்தை சேர்ந்தவர்களும் அங்கு தங்கள் இறைவழிபாட்டை தொடர முயற்சி செய்யவே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மலைக்கோட்டை பகுதியில் 144 தடை உத்தரவை திண்டுக்கல் கலெக்டர் விஜயலட்சுமி பிறப்பித்துள்ளார். இந்த 144 தடை உத்தரவு நேற்று மாலை முதல் நடைமுறைக்கு வந்தது.
மலைக்கோட்டை மற்றும் அதன் கிரிவல பாதையில் ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் கூடுவது தடை செய்யப்படுகிறது. இதனையடுத்து அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.