உடல்நலம் காப்போம்... உணவுமுறையே ஆரோக்கியத்திற்கு அடித்தளம்..!!
health tips 13
இன்றைய காலக்கட்டத்தில் நாம் உண்ணும் உணவானது நம்முடைய உடலின் ஆரோக்கியத்தை குறைப்பதோடு மட்டுமல்லாமல் பல புதிய நோய்களும் உருவாக காரணமாகிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆம், நாம் உண்ணும் உணவே நம்முடைய ஆரோக்கியத்தை குறைக்கிறது. நம் முன்னோர்கள் அனைவரும் உணவே மருந்து என்று வாழ்ந்தார்கள். ஆனால், நாம் இப்போது உணவின் மூலமே பல வியாதிகளை உருவாக்குகின்றோம்.
நாம் மறந்த உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய, நம்முடைய பராம்பரிய உணவுமுறைகள் பற்றி இன்று காண்போம்.
உணவுமுறைகள் :
1. கம்பங்கூழ் :
கம்பங்கூழ் செய்வதற்கு கம்பு, நொய்யரிசி, உப்பு, தயிர் போன்ற பொருட்கள் தேவைப்படும்.
முதலில் கம்பை 1ஃ2 மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு நிழலில் காயவைத்து மிக்ஸியில் பொடித்து, சலித்து எடுத்து கொள்ளவும். இதை தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து தோசை மாவு பதத்துக்கு நன்கு கலந்து எடுத்து வைக்கவும். ஒரு இரவு, ஒரு பகல் அப்படியே இருக்க வேண்டும்.
அடுத்த நாள் நொய்யரிசியை பொங்க வைத்து, அதனுடன் கரைத்த மாவு கலவையை கலந்து, தேவையான நீர் சேர்த்து வேக வைத்து எடுக்கவும்.
மறுநாள் இத்துடன் தேவையான தயிர் கலந்தால் உடலுக்கு ஆரோக்கியமான கம்பங்கூழ் தயார்.
பயன்கள் :
உடல் சோர்வை நீக்கி சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.
உடல் சூட்டை குறைத்து, உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தை கொடுக்கிறது.
வயிற்றுப்புண் மற்றும் வாய்ப்புண்ணை முற்றிலுமாக குணப்படுத்தும்.
2. ராகி தோசை :
ராகி தோசை செய்வதற்கு ராகி மாவு, உளுந்து, உப்பு போன்ற பொருட்கள் தேவைப்படும்.
உளுந்தைக் கழுவி ஒரு மணி நேரம் ஊற வைத்து நன்கு அரைத்துக் கொள்ளவும். பின்பு ராகி மாவைச் சிறிது தண்ணீர் சேர்த்துக் கரைத்து கொண்டு, அதை உளுந்து மாவு, தேவையான அளவு உப்பு சேர்த்து கையால் நன்கு கலக்க வேண்டும்.
பின்பு ஆறு மணி நேரம் புளிக்கவிட வேண்டும். பிறகு இந்த மாவைத் தோசையாக சுட்டெடுக்கவும்.
பயன்கள் :
உடலின் சீரான இயக்கத்திற்கும், பிராணவாயு உடலின் அனைத்து திசுக்களுக்கும் சென்று சேர்ப்பதற்கான புரதச்சத்தை கொடுக்கிறது.
உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு இவை ஒரு அற்புத உணவாகும்.