சூப்பரான வேர்க்கடலை போளி செய்வது எப்படி? வாங்க சமைக்கலாம்.!
verkadalai poli
பருப்பு மற்றும் தேங்காய் போளி சாப்பிட்டு இருப்பீர்கள். இப்போது சத்தான வேர்க்கடலையை பூர்ணம் வைத்து சூப்பரான போளி செய்வது எப்படி? என்று பார்க்கலாம்.
தேவையானப் பொருட்கள் :
பச்சை வேர்க்கடலை - 250 கிராம்
உருளைக்கிழங்கு - 3
கேரட் - 3
பெருங்காயம் - 2 சிட்டிகை
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
கடுகு - ஒரு டீஸ்பூன்
கோதுமை மாவு - 3 கப்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 3 டீஸ்பூன்
எலுமிச்சை ஜூஸ் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை :
முதலில் கொத்தமல்லித்தழையை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின் வேர்க்கடலை, உருளைக்கிழங்கு, கேரட் ஆகிய மூன்றையும் நன்றாக வேகவிட்டு ஆறியதும் நன்றாக மசித்துக் கொள்ளவும்.
பிறகு மசித்த கலவையை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பெருங்காயம், சிறிதளவு உப்பு, மிளகாய் தூள், கொத்தமல்லித்தழை, எலுமிச்சை ஜூஸ் சேர்த்து, கலந்து வைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு மற்றும் கலந்து வைத்துள்ள வேர்க்கடலை கலவையை போட்டு 5 நிமிடம் நன்றாக கிளறி ஆறியதும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்க வேண்டும்.
பின் கோதுமை மாவில் தேவையான அளவு தண்ணீர், சிறிதளவு உப்பு, மஞ்சள் தூள், ஒரு கரண்டி எண்ணெய் விட்டு தளர பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டி அதன் உள்ளே வேர்க்கடலை கலவை உருண்டையை வைத்து மூடிவிடவும்.
பின்பு கோதுமை உருண்டையை வாழை இலையின் மீது போளியாக தட்டி தோசைக்கல்லில் போட்டு, சுற்றி எண்ணெய் சேர்த்து வெந்ததும் திருப்பிப் போட்டு வேக வைத்து எடுத்தால், சூப்பரான மசாலா வேர்க்கடலை போளி தயார்.