'1 ரூபாய்' அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து பிரசாந்த் பூஷண் மீண்டும் வழக்கு தொடர்ந்தார்..!
prashant bhushan again case filed in supreme court
மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் தனது டிவிட்டர் பக்கத்தில், "கொரோனா காலத்தில் புலம் பெயர் தொழிலாளர்கள் வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கையாண்ட விதம், விசாரணை நடத்திய முறை குறித்து கருத்து தெரிவித்து இருந்தார். மேலும், கடந்த 6 ஆண்டுகளாக ஜனநாயகம் அழிக்கப்பட்டு வருவதாகவும், அதில், உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதிகள் 4 பேர் ஆற்றிய பங்களிப்பு முக்கியமானது என்றும் கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார்.
பிரசாந்த் பூஷணின் இந்த விமர்சனங்கள் மற்றும் கருத்துக்கள், நீதிமன்றத்தை அவமதிப்பதாக கூறி நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்து அவர் குற்றவாளி என தீர்ப்பு வழங்கியது. மேலும், மன்னிப்பு கேட்க பிரசாந்த் பூஷணுக்கு 2 நாள் அவகாசம் அளித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனிடையே "தனது கருத்தை திரும்பப் பெறப்போவதில்லை என்றும், இதற்கு தான் மன்னிப்பு கேட்டால், தனது மனசாட்சியையும், நீதிமன்றத்தையும் அவமதிப்பதாக அமையும்" என பிரசாந்த் பூஷன் அறிக்கை வெளியிட்டிருந்தார். இதனைத்தொடர்ந்து நடைபெற்ற வழக்கு இறுதி விசாரணையில், பிரசாந்த் பூஷணுக்கு ரூ.1 அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. ஒரு ரூபாய் கட்ட மறுத்தால் மூன்று மாதங்கள் சிறை தண்டனையும், 3 ஆண்டுகளுக்கு வழக்கறிஞர் பணி செய்யவும் தடை விதிக்கப்படும் என அந்த தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது
இந்த நிலையில், தீர்ப்பை எதிர்த்து வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் தலைமை நீதிபதியை விமர்சித்த வழக்கில் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
தான் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, தண்டனையாக 1 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதற்கு எதிராக பிரசாந்த் பூஷண் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
English Summary
prashant bhushan again case filed in supreme court