பயணிகள் அதிருப்தி! சென்னைக்கு குட்பை சொன்ன ஏர் இந்தியா...? - துபாய் சேவை நிறுத்தம்
Passengers unhappy Has Air India said goodbye Chennai Dubai service suspended
துபாய்–சென்னை வான்வழித் தொடர்பு பல ஆண்டுகளாக பயணிகளின் வாழ்க்கையில் ஓர் அவசியமான பாதையாக இருந்து வந்தது. தற்போது இண்டிகோ, எமிரேட்ஸ் உள்ளிட்ட தனியார் விமான நிறுவனங்கள் இந்த பாதையில் நேரடி சேவைகளை வழங்கி வந்தாலும், ஒருகாலத்தில் இந்த வான்வழிப் பாலத்தின் முன்னோடியாக இருந்தது இந்தியன் ஏர்லைன்ஸ்.

சென்னையிலிருந்து துபாய்க்கு அரசு நிறுவனமாக நேரடி விமான சேவை இயக்கப்பட்டு, பொதுமக்களுக்கு வசதியான, நம்பகமான பயண வாய்ப்பாக இது திகழ்ந்தது.நஷ்டத்தில் இயங்குகிறது என்ற காரணத்தால் 2007-ம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ், ஏர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டாலும், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக துபாய்–சென்னை இடையிலான விமான சேவை இடையறாது தொடர்ந்தே வந்தது.
அரசு நிறுவனமாக இருந்ததால் குறைந்த கட்டணத்தில் பயணிக்க ஏற்ற சேவையாகவும் இது பயணிகளின் மனதில் இடம் பிடித்திருந்தது.ஆனால் தற்போது திடீரென இந்த வரலாற்றுச் சேவை நிறுத்தப்படுவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு தினந்தோறும் இந்த பாதையை பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிக பயணிகள், நல்ல வருவாய் என அனைத்தும் இருந்த போதிலும், இந்த லாபகரமான சேவையை நிறுத்தி, பெங்களூரில் இருந்து துபாய்க்கு ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ சேவையை தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தை ஏர் இந்தியா முற்றிலும் புறக்கணிக்கிறது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. விமான போக்குவரத்து நிபுணர்களும் இந்த முடிவை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இதனிடையே மத்திய மற்றும் மாநில அரசுகள் தலையிட்டு, துபாய்–சென்னை நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் தரப்பில் வலுவான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
English Summary
Passengers unhappy Has Air India said goodbye Chennai Dubai service suspended