மதுபான கொள்கை முறைகேடு.. சிபிஐ முன்பு இன்று ஆஜராகிறார் டெல்லி முதல்வர்...!
liquor policy violation case Delhi Chief Minister to appear before CBI today
டெல்லியில் கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பரில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான அரசு புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்தியது. இதையடுத்து 849 தனியார் நிறுவனங்களுக்கு மதுக்கடை உரிமங்கள் வழங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, மதுபானக் கொள்கையை நடைமுறைப்படுத்தியதில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வீடு உட்பட 21 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், கணினி, செல்போன், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு துணை முதல்வர் மணிஷ் சிசோடியா சிசோடியா, 3 அரசு அதிகாரிகள், 9 தொழிலதிபர்கள் உட்பட பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும் மதுபான கொள்கை அமல்படுத்தியதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், இதனால் அரசுக்கு ரூ.2,800 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் சிபிஐ தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து இந்த மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக முன்னாள் துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து, அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றன. இந்நிலையில், மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் முதலமைசர் கெஜ்ரிவால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது. இதையடுத்து இன்று காலை 11 மணியளவில் சி.பி.ஐ. அலுவலகத்தில் விசாரணைக்காக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் நேரில் ஆஜராக உள்ளார்.
English Summary
liquor policy violation case Delhi Chief Minister to appear before CBI today