காற்று மாசை குறைக்க செயற்கை மழை திட்டம்; கான்பூர் ஐஐடி குழுவினர் கைக்கோர்த்துள்ள டெல்லி அரசு..!
Delhi government joins hands with IIT Kanpur team to create artificial rain to reduce Delhi air pollution
டெல்லி அரசின் திட்டப்படி செயற்கை மழையை உருவாக்க கான்பூரில் உள்ள ஐஐடியுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி கான்பூர் ஐஐடி குழுவினர் செயற்கை மழையை உருவாக்க தயாராகியுள்ளனர். கான்பூர் ஐஐடி குழு, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப ரீதியிலான நடவடிக்கைகளை கையாளும் என டெல்லி அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதாவது, மேகங்களில் "சில்வர் அயோடைடு" ரசாயனத்தை தெளித்து செயற்கை மழையை உருவாக்க, சிறப்பு கருவிகள் பொருத்தப்பட்ட ‘செஸ்னா 206H’ ரக விமானம் ஒன்று தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. குறித்த விமானத்தின் செயல்பாடு மற்றும் ரசாயனத்தை தெளிக்கும் சிறப்பு கருவிகளின் செயல்பாடு ஆகியவை ஏற்கெனவே பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை ஐந்து முறை சோதனை ஓட்டங்கள் நடைபெற்றிருப்பதாகவும் டெல்லி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு மழை மேகங்களை கணிக்க வானிலை ஆய்வு மையத்தை டெல்லி அரசு தொடர்புகொண்டிருந்துள்ளதோடு, அதன் தொடர்ச்சியாக வானிலை ஆய்வு மையம் தொடர்ச்சியாக மழைக்கான சூழலை கண்காணித்து வருகிறது. இவ்வாறு செயற்கை மழைக்கு ஏற்ற வகையில் டெல்லிக்கு அருகே மழை மேகங்கள் வரும்போது, வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே அரசுக்கு தகவல் தெரிவிக்கும் என்று கூறப்படுகிறது.
அதன் அடிப்படையில், அப்போது, டெல்லி அரசு கான்பூர் ஐஐடி குழுவை தொடர்பு கொண்டு, குறிப்பிட்ட நேரத்துக்குள் ரசாயனத்தை மேகங்களில் தெளித்து செயற்கை மழையை உண்டாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், இதுவரை மழை மேகங்கள் டெல்லி அருகே வரவில்லை, இதனால், டெல்லி அரசின் செயற்கை மழை திட்டம் காத்திருப்பில் உள்ளது. தென்மேற்கு பருவமழை ஏற்கெனவே முடிந்துள்ளதால், எப்போது மழை மேகங்கள் டெல்லி அருகே வரும் என்பதை உடனடியாக கணிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. குறித்த திட்டத்தின் படி, இரண்டு அல்லது மூன்று முறை செயற்கை மழையை உருவாக்கினால், டெல்லியில் காற்றில் உள்ள மாசு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Delhi government joins hands with IIT Kanpur team to create artificial rain to reduce Delhi air pollution