சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமீனா? காவல் நீட்டிப்பா? அமராவதி நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு!
Amravati court today verdict on Chandrababu Naidu bail plea
ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு ஆந்திர முதலமைச்சராக இருந்தபோது திறன் மேம்பாட்டு நிதி முறைகேடு செய்ததாக ஆந்திர மாநில லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தொடரப்பட்ட வழக்கில் கடந்த 9ம் தேதி சிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டார். காவல்துறையினர் விசாரணைக்கு பிறகு லஞ்ச ஒழிப்பு துறை நீதிமன்றத்தின் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் அவர் ராஜமுந்திரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
வரும் அக்டோபர் 5ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள சந்திரபாபு நாயுடு தன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி ஆந்திர மாநில உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை ஆந்திர மாநில உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து அவர் தற்போது உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.
இதற்கிடையே சந்திரபாபு நாயுடு சார்பில் அமராவதி நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அதே வேலையில் சந்திரபாபு நாயுடுவை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்குமாறு சிஐடி போலீசார் சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த இரு மனு மீதான விசாரணை நேற்று இரவு வரை விஜயவாடா லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த இரு மனுக்களின் முதலில் எதை விசாரிப்பது என இரு தரப்பு வழக்கறிஞர்களும் வாதிட்டனர். அதன் முடிவில் சந்திரபாபு நாயுடுவின் ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில் சந்திரபாபு நாயுடு தாக்கல் செய்த ஜாமின் மனு மீதான தீர்ப்பை அமராவதி நீதிமன்றம் இன்று வழங்குகிறது. அதே வேளையில் ஏற்கனவே ஆந்திர மாநில சிஐடி போலீசார் சிறையில் உள்ள சந்திரபாபு நாயுடுவை 2 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்திய அறிக்கையை நேற்று சீல் இட்ட கவரில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
அதனைத் தொடர்ந்து சிஐடி தரப்பில் நேற்று சந்திரபாபு நாயுடுவை மேலும் 2 நாட்கள் காவல் நிலையத்தில் விசாரணை நடத்த அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான வாதமும் நேற்று இரவு நடைபெற்ற நிலையில் சந்திரபாபு நாயுடுவின் ஜாமீன் மனு மற்றும் சிஐடி காவலில் எடுத்து விசாரிக்கும் மனு மீதான தீர்ப்பு இன்று வழங்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனால் சந்திரபாபு நாயுடுக்கு ஜாமீன் கிடைக்குமா? அல்லது சிஐடி கோரிக்கையை ஏற்று மேலும் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
English Summary
Amravati court today verdict on Chandrababu Naidu bail plea