உயர்கல்வியில் நுழைவுத்தேர்வு! கல்லூரிப்படிப்பை கனவாக்கிவிடும் என ஆசிரியர் சங்கம் கருத்து.!
Teachers association on education policy
உயர்கல்வியில் நுழைவுத் தேர்வை கொண்டு வந்தால் கல்லூரிப்படிப்பு கனவாகிப்போய்விடும் என
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மத்திய அரசின் புதியக்கல்விக்கொள்கை அமுல்படுத்தும் நோக்கத்தோடு பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை பொது நுழைவுத் தேர்வு அடிப்படையில் நடைபெறும் என்று பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது. ஏழை, எளிய, கிராமப்புற, அரசுப்பள்ளி மாணவர்கள் பட்டப்படிப்பு படிப்பது நுழைவுத்தேர்வு தடையாக இருக்கும். சமூக நீதிக்கு எதிரானது.
மார்ச் 2022 அன்று பல்கலைக்கழக மாண்யகுழு வெளியிட்டுள்ள அறிவிப்பில், UGC நிதியில் செயல்படும் 45 மத்திய பல்கலைக்கழகங்களில் 2022-2023 கல்வியாண்டு முதல் கல்லூரி படிப்புக்கு நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும், முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு முறையை பல்கலைக்கழகங்கள் கடைபிடிக்கலாம் என்றும், பிற தனியார், அரசு கல்லூரிகளும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் நுழைவுத் தேர்வை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.
நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை மூலம் தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் இத்தேர்வு நடத்தப்படும் என்றும் ஏப்ரல் முதல் வாரம் அதற்கான விண்ணப்பம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
கலை அறிவியல் படிப்புகளுக்கும் கூட பொது நுழைவுத் தேர்வு என்பது இடஒதுக்கீட்டை சீர்குலைக்கும் வகையில் சமூகநீதிக்கு எதிரானது. ஏழை, எளிய, கிராமப்புற, அரசுப்பள்ளி மாணவர்கள் நிலை இனி கல்லூரிப்படிப்பே கனவாகிப்போய்விடும்.
இத்தேர்வு முறையினால் 12 ஆண்டுகள் படித்து எடுத்துள்ள மதிப்பெண் புறந்தள்ளிவிட்டு 12-ம் வகுப்பு படிக்கும்போதே நுழைவுத்தேர்வுக்கு படிப்பதற்கான தேவையை உருவாக்கிவிடும்.பணம் படைத்தவர்களே படிக்கமுடியும் என்ற சூழலை உருவாக்கிவிடும். மேலும் இந்த நுழைவுத்தேர்வு ஒட்டுமொத்தமாக நீட் தேர்வு போன்று மாநில பாடத்திட்டத்தைப் புறகணிக்கும்.
முதலமைச்சர் அவர்கள் பெண்கள் பட்டப்படிப்பு அவசியத்தை உணர்ந்து மாதந்தோறும் ரூ.1000 அறிவித்து தமிழ்நாடு அரசு முன்னெடுக்கும் வேளையில், பட்டப்படிப்பு மேற்கொள்வதற்கான தகுதியை மத்திய அரசு நிர்ணயிப்பது ஏழை,எளிய மக்களின் கல்வி கடிவாளம் போடுவதாக உள்ளது.
சமூகநீதிக்கு எதிரான நுழைவுத் தேர்வு அறிவிப்பை ரத்துசெய்து பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைகள் நடத்தப்பட வேண்டுமென மத்திய அரசை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்றுவதே நிரந்தர தீர்வாக அமையும்
மேலும் அதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் உறுதுணையாக இருக்கும் என்ற உறுதிமொழியினையும் அளிக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.
English Summary
Teachers association on education policy