குறையாத தங்கம் விலை..எகிறும் தங்க மார்க்கெட்!200 வருஷ பழக்கமே மாற போகுது! புலம்பி தவிக்கும் தங்க வியாபாரிகள்!
Unabated gold prices soaring gold market 200 year old habits are about to change Gold traders are complaining
தங்கம் விலை பவுனுக்கு ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டியுள்ள நிலையில், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மத்தியில் இனி தங்கம் வாங்க முடியுமா என்ற அச்ச உணர்வு அதிகரித்துள்ளது. நகைக்கடைகளில் மக்கள் வருகை முற்றிலும் குறையவில்லை என்றாலும், அவர்கள் வாங்கும் தங்கத்தின் அளவு கணிசமாக குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் எடை குறைந்தாலும் பார்ப்பதற்கு பெரிதாக தோற்றமளிக்கும் நகைகளையே வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்புவதாகவும் கூறுகின்றனர்.
சர்வதேச பொருளாதார சூழ்நிலை, அமெரிக்க டாலரின் மதிப்பு, உலக அரசியல் பதற்றம் உள்ளிட்ட பல காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கங்களுடன் தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், தற்போது வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த அக்டோபர் 17ஆம் தேதி சென்னையில் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.97,600 ஆக உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் அக்டோபர் 28ஆம் தேதி ரூ.88,600 ஆகவும், நவம்பர் 13ஆம் தேதி ரூ.95,920 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.
டிசம்பர் 12ஆம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.98,960 ஆக உயர்ந்த நிலையில், டிசம்பர் 15ஆம் தேதி வரலாறு காணாத வகையில் பவுனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி ரூ.1,00,120 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டது. இதனால் தங்க சந்தையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறிதளவு விலை குறைந்தாலும், உயர்ந்த நிலையிலேயே விலை நீடித்து வருகிறது. நேற்று சென்னையில் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.99,200 ஆக விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.50 உயர்ந்து ரூ.12,400 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தங்கம் மட்டுமின்றி, வெள்ளி விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.11 உயர்ந்து ரூ.222 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 22 ஆயிரமாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ்சமூகத்தில் தங்க நகைகள் அழகு, அந்தஸ்து, கலாச்சார அடையாளம் மற்றும் பாதுகாப்பான முதலீடு என பல காரணங்களால் முக்கியத்துவம் பெற்றவை. ஆனால் தற்போதைய விலையேற்றம், அந்த பாரம்பரிய பழக்கத்திற்கே சவால் விடும் நிலையை உருவாக்கியுள்ளது. நகைக்கடைகளில் மக்கள் வாங்கும் அளவு குறைந்துள்ளதால், சிறிய நகைக்கடைகள் மற்றும் நகை உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். விலை உயர்வு தொடர்ந்து நீடித்தால், இந்தத் தொழிலை நம்பி வாழும் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் எதிர்காலமே கேள்விக்குறியாக மாறும் என அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
English Summary
Unabated gold prices soaring gold market 200 year old habits are about to change Gold traders are complaining