திட்டமிட்டு நகை வியாபாரியை கடத்தி கை, கால்களை கட்டி 80 சவரன் மற்றும் ரொக்கமும் கொள்ளை!. அதிர்ச்சி சம்பவம்!.
நகை வியாபாரியை கடத்திச்சென்று, 80 பவுன் நகைகளை கொள்ளையடித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தை அடுத்து காரைக்குடியை சேர்ந்த விக்னேஷ் அப்பகுதியில் சொந்தமாக நகைக்கடை மற்றும் பழைய நகைகளை பழுது நீக்கம் செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் காலை புதுக்கோட்டை அருகே உள்ள ஊர்களுக்கு வியாபாரத்திற்கு வந்தார்.
இதனையடுத்து அங்கு உள்ள நகைக்கடைகளில் இருந்து 600 கிராமுக்கு மேல் பழைய நகைகளை வாங்கியுள்ளார். இரு தினங்களுக்கு முன் இரவு காரைக்குடிக்கு காரில் புறப்பட்டார்.
அரிமளம் அருகே கீழாநிலைக்கோட்டை பாம்பாற்று பாலம் அருகே செல்லும்போது, திடீரென மற்றொரு காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், விக்னேஷின் காரை வழிமறித்து அவரது காரை நிறுத்தினர். அதிர்ச்சியடைந்த அவர் தப்பிப்பதற்காக முயற்சிசெய்துள்ளார்.
அதற்குள் அந்த கும்பல் விக்னேஷின் காரை சுற்றி வளைத்து அவரின் கார் கண்ணாடிகளை இரும்பு ராடுகள் மூலம் உடைத்துள்ளனர். பின்னர் விக்னேஷ் வைத்திருந்த நகை, பணம் போன்றவற்றை பறிக்க முயற்சித்துள்ளனர்.
அவர் பயத்தில் காப்பாற்றுங்கள் என சத்தம்போட்டுள்ளார், அதனால் அந்த கும்பல் விக்னேஷின் கண்ணை துணியால் கட்டினர். பின்னர் அவரது கை,கால்களை கட்டி காருக்குள் போட்டு விட்டு, விக்னேஷ் வைத்திருந்த 80 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் பணத்தையும் கொள்ளையடித்துள்ளனர்.
சற்று தூரத்தில் அந்த காரையும், விக்னேஷையும் அங்கேயே விட்டு விட்டு, அவர்கள் வந்த காரில் ஏறி தப்பிச்சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து விக்னேஷ் புதுப்பட்டி மற்றும் காரைக்குடியில் உள்ள தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார்.
பின்னர் கே.புதுப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு வந்து புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் தங்களது உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் உள்ள சோதனைச்சாவடிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.
கொள்ளையர்கள் குறித்து தடையங்கள் சிக்காததால் காவல்துறையினர் விரைந்து தேடிவருகின்றனர். விரைவில் கொள்ளையர்கள் சிக்குவார்கள் என காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றனர்.
English Summary
The police are searching for a gang of robbers who have stolen jewelry and robbed 600 grams of jewels.