குப்பை தொட்டியான தமிழ்நாடு .,கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்..!
குப்பை தொட்டியான தமிழ்நாடு .,கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்..!
நெல்லை மாவட்டத்தில் கேரள மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்படும் மருத்துவக் கழிவுகள் அரசுக்கு சொந்தமான இடங்களில் கொட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மருத்துவமனையிலிருந்து கொண்டுவரப்படும் கழிவுகள் மூலம் நோய்தொற்று உருவாக வாய்ப்புள்ளதால், மருத்துவ கழிவுகளை மற்ற குப்பைகளோடு கலப்பதற்கோ,மண்ணில் புதைப்பதற்கோ, தமிழக அரசு தடை விதித்துள்ளது.
மேலும் தமிழக மருத்துவமனைகளில் இருந்து கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளை 5 விதமாக பிரிக்கபட்டு பின்,தஞ்சை அருகில் உள்ள தொழிற்சாலையில் முறைப்படி எரித்து அழிக்கப்படுகிறது.
இதற்கு மருத்துவமனை துவங்கும் போதே, அதனை மாசு கட்டுப்பாடு நிறுவனத்திடம் பதிவு செய்து அனுமதி பெற வேண்டும். இதை மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குநர் கண்காணிக்க வேண்டும்.
இப்படி தமிழக மருத்துவமனைகளுக்கு இவ்வளவு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், கேரள மருத்துவமனைகளில் இருந்து அகற்றப்படும் ஆபத்தான மருத்துவ கழிவுகள் தமிழக எல்லைக்குள் கொட்டப்படுவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் மருத்துவ பிளாஸ்டிக் கழிவுகளை நிலத்தில் புதைப்பதால், நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதோடு, அந்த கிராம மக்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இதை பற்றி பேசிய மாவட்ட உதவி ஆட்சியர்,மக்களுக்கு எந்த வித தீங்கும் இன்றி கழிவுகளை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல், அங்கேயே குழி தோண்டி புதைத்து விடலாமா என்று யோசிப்பதாக கூறியது மக்களிடையே மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பணம் பெற்றுக்கொண்டு அதிகாரிகளின் கண்காணிப்பில் அவர்களது அனுமதியுடனே மருத்துவக்கழிவுகள் கொட்டப்படுவதாக ராதாபுரம் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால் அரசின் சுகாதாரத்துறை உடனடியாக இதில் தலையிட்டு, அங்குள்ள அபாயகரமான மருத்துவ கழிவுகளை அகற்றி முறைப்படி அழிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
English Summary
tamilnadu became dustpin, dropped medical wastes