கோவை டிஐஜி தற்கொலையில் சந்தேகம்.. சிபிஐ விசாரணை கோரும் ஈபிஎஸ்.!!
EPS urges CBI to investigate Coimbatore DGP suicide case
கோவை சரக டிஐஜி விஜயகுமார் இன்று காலை 6 மணி அளவில் தனது அலுவலகத்தில் மெய் காப்பாளராக பணியாற்றும் ரவி என்பவரின் துப்பாக்கியை வாங்கி தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அவர் பணிச்சுமையின் காரணமாக தற்கொலை செய்து கொள்ளவில்லை என தமிழ்நாடு டிஜிபி அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.
இதற்கிடையே கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலையில் சந்தேகம் இருப்பதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "கோவை சரக காவல்துறை டிஐஜி திரு.விஜயக்குமார் IPS அவர்கள் மரணமடைந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
காவல்துறை துணை கண்காணிப்பாளராக தனது பணியை துவங்கி , பின்னர் நேரடியாக இந்திய காவல் பணிக்கு நேரடியாக தேர்வாகி, டிஐஜி அளவிற்கு தன்னைத்தானே வளர்த்துக் கொண்ட பெருமைக்குரிய திரு.விஜயக்குமார் அவர்களின் பணி போற்றத்தக்கது. அவரின் மறைவு காவல்துறைக்கு பேரிழப்பு ,அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் , சுற்றத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
காலையில் வழக்கமான நடைபயிற்சி முடித்து வந்த திரு.விஜயக்குமார் அவர்கள் தனது பாதுகாவலரின் கைத்துப்பாக்கியை வாங்கி, தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வருகின்றன, இது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. ஆகவே திரு.விஜயகுமார் IPS அவர்களின் தற்கொலையை சிபிஐ மூலம் விசாரித்து இதன் உண்மை பின்னணியை அறிய வேண்டுமென இந்த அரசை வலியுறுத்துகிறேன்" என பதிவிட்டுள்ளார்.
English Summary
EPS urges CBI to investigate Coimbatore DGP suicide case