என்.எல்.சி நிர்வாகத்தை கண்டித்து அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம்.!!
Cuddalore Govt college students protest against NLC
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் அமைந்துள்ள என்எல்சி நிறுவனம் இரண்டாம் நிலக்கரி சுரங்க விரிவாக்க பணிக்காக சேத்தியாதோப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 25,000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் என்எல்சி நிறுவனம் வளையமாதேவி பகுதியில் விவசாய நிலத்தில் உள்ள பயிர்களை அழித்து கால்வாய் அமைக்கும் பணியை தொடங்கியதால் விவசாயிகளும், பொதுமக்களும், அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் என்எல்சி நிறுவனத்திற்கு எதிராக விவசாயி தொடர்ந்த வழக்கில் என்எல்சி நிறுவனம் பயிர்களை அழித்ததற்காக ஏக்கருக்கு 40,000 ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டதோடு செப்டம்பர் 15ஆம் தேதிக்கு மேல் விவசாயிகள் யாரும் என்எல்சி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட நிலத்தில் விவசாயம் செய்யக்கூடாது என வழங்கியது.
இதற்கிடையே என்எல்சி நிறுவனம் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சி.முட்லூரில் அமைந்துள்ள அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் திரளாக பங்கேற்று என்எல்சி நிறுவனத்திற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி வருகின்றனர். குறிப்பாக என்எல்சி நிர்வாகம் ஒத்துக்கொண்ட இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும் எனவும், கடலூர் மண்ணையும் விவசாய நிலத்தையும் பாழாக்காதே எனவும் கோஷமிட்டு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் கல்லூரி வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. ஏற்கனவே பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வளையமாதேவி பகுதியில் போராட்டம் நடத்த காவல்துறையினர் அனுமதி மறுத்து வரும் நிலையில் கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகத்துக்குள் போராட்டத்தில் இறங்கியுள்ளது கடலூர் மாவட்டத்தை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
English Summary
Cuddalore Govt college students protest against NLC