தனியார் பள்ளியை கதி கலங்க வைத்த அமைச்சர் : பகிரங்கமாக போட்டுடைத்ததால் அதிரடி!
minister notice to private school
தி.மலையில் டெங்கு காய்ச்சல் குறித்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தாத தனியார் பள்ளிக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உத்தரவின்பேரில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் டெங்கு உள்பட சிலவகையான வைரஸ் காய்ச்சலுக்கு கைக்குழந்தைகள் முதல் வயது பெரியவர்கள் வரை ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளதோடு சில உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளது. தற்போது டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மிகத் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவமனையில் மட்டும் 400-க்கும் அதிகமானோர் டெங்கு காய்ச்சலுக்கு அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், இதுவரையிலும் 20-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலுக்கு இறந்துள்ளதாகவும் திமுக முன்னாள் அமைச்சர் எவ.வேலு தெரிவித்தார்.
இந்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தி.மலையில் டெங்கு தடுப்பு பணிகளை அதிரடியாக இன்று ஆய்வு செய்ததோடு அருணாசலேஸ்வரர் கோவில் ராஜ கோபுரத்தின் அருகே டெங்கு காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாமையும் தொடங்கி வைத்தார்.
அதனையடுத்து அவர் அதே பகுதியில், நிலவேம்பு குடிநீரை நகராட்சியின் 39 வார்டுகளிலுள்ள வீடுகளுக்கும் நேரில் சென்று வழங்குவதற்கான 39 சைக்கிள் கொண்ட விழிப்புணர்வு பேரணியையும் துவங்கி வைத்தார்.
பின்னர் வேங்கிக்கால் செல்வாநகர் பகுதியில் வீடு, வீடாக சென்று ஆய்வு செய்து குடிநீர் தொட்டி மற்றும் உரல்களில் தண்ணீர் தேங்கவிடாமல் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.
அப்போது அமைச்சர், அதே பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்கள் இருவரை அழைத்து, டெங்கு காய்ச்சல் குறித்து கேட்டதற்கு மாணவர்கள் பதில் அளிக்கவில்லை. உங்களது பள்ளியில் டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு எதுவும் ஏற்படுத்தவில்லையா? என்று விசாரித்தார்.
அதற்கு பதிலளித்த மாணவர்கள், டெங்கு காய்ச்சல் குறித்து எங்களது பள்ளி நிர்வாகம் எந்த ஒரு விழிப்புணர்வையும் மாணவ, மாணவிகளுக்கு ஏற்படுத்தவில்லை என்று புகார் கூறினர். இதனையடுத்து, சம்பந்தப்பட்ட அந்த பள்ளியிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப அமைச்சர் உத்தரவிட்டார்.
மாவட்ட கலெக்டர் கந்தசாமி, உடனடியாக அந்த தனியார் பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பினார். இதைத்தொடர்ந்து, தி.மலை அரசு மருத்துவாமனையிலுள்ள காய்ச்சல் வார்டில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார்.
English Summary
Minister sent a notice to a private school