பாஜக-கம்னியூஸ்ட் தொண்டர்கள் இடையே மோதல்.! கேரளாவில் தொடரும் பதற்றம்.!! பேருந்துகள் எல்லையில் நிறுத்தம்.!!!
KERALA BJP PROTEST
கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் 10 முதல் 50 வயதிற்குட்பட்ட அனைத்து வயது பெண்களுக்கு செல்லலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து பெண்கள் பலரும் கோவிலுக்குள் செல்ல முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்தில் தமிழகத்தை சேர்ந்த மனிதி என்ற அமைப்பை சேர்ந்த பெண்கள் ஐயப்பன் கோவிலில் நுழைய முற்பட்டனர். மேலும் பல இளம்பெண்களும் ஐயப்பன் கோவிலில் நுழைய முற்பட்டனர். ஆனால், அங்கு இருந்த பக்தர்கள், இந்து அமைப்பினர் மற்றும் பாஜக தொண்டர்கள் தடுத்து நிறுத்தி அந்த இளம் பெண்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்.
இதற்கிடையே, இன்று அதிகாலை 50 வயதுக்கு கீழ் உள்ள இரு பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோவில் சன்னிதானத்தில்18 படி ஏறாமல் மற்றொரு வாசல் வழியாக சென்று ஐயப்பனை தரிசனம் செய்துள்ளனர். இதனை அம்மாநில முதல்வரும் உறுதி செய்து அறிவித்துள்ளார்.
இதன் காரணமாக சபரிமலை சன்னிதானம் நடை திடீர் என அடைக்கப்பட்டுது. பின் ஒரு மணி நேர பரிகார பூஜைக்கு பிறகு கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டது. சபரிமலை அய்யப்பனை இரண்டு பெண்கள் தரிசனம் செய்த செய்தி அறிந்த பாஜக தொண்டர்கள், கேரளா மாநிலத்தில் தலைமை செயலகம் அருகே ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தலைமை செயலகத்தில் நுழைய முற்பட்டதாக தகவல் வெளியாகியது.
இதனை அறிந்த கம்னியூஸ்ட் கட்சி தொண்டர்கள் குவிய தொடங்கியுள்ளனர். பாஜக-கம்னியூஸ்ட் கட்சி தொண்டர்களிடையே கல்வீச்சு நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அந்த பகுதி முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சபரிமலை விவகாரத்தில் தொடரும் போராட்டம் காரணமாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகள் இருமாநில எல்லைப் பகுதியான களியக்காவிளையில் இருந்து திருப்பி விடப்பட்டு வருகின்றது.