திருக்குறளே "சனாதன தர்ம" சிந்தனை நூல்தானே.! கனிமொழிக்கு நடிகை கஸ்தூரி பதிலடி.!!
Kasthuri response to Kanimozhi comment on Sanadana Dharma
சென்னை திருவல்லிகேணியில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரா மடத்தின் பொன்விழா கொண்டாட்டம் மற்றும் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தின் திறப்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி இன்று கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் "இந்தியா ஒரு சனாதன நாடு. பாரதத்தையும் சனாதன தர்மத்தையும் பிரிக்கவே முடியாது என ரிஷி அரவிந்தோ கூறியுள்ளார். சனாதன தர்மம் துவங்கவும் பாரத் என்ற நாடு உருவாகவும் தமிழ்நாடு முக்கிய பங்காற்றி உள்ளது.
இந்தியா என்பதற்கு தான் அறிமுகம் தேவை, ஆனால் பாரதம் என்பதற்கு அறிமுகம் தேவையில்லை. சனாதனதர்மம் இந்த உலகம் ஒரு குடும்பம் என கூறுகிறது. அதுதான் யாதும் ஊரே யாவரும் கேளிர். 10 ஆயிரம் ஆண்டுகளாக பாரதத்தில் இந்த வாழ்க்கை முறை தான் இருந்து வருகிறது. வேறு எந்த ஒரு நாட்டிலும் இப்படி ஒரு வாழ்க்கை முறை இல்லை. தற்போதுள்ள இளைஞர்களுக்கு நல்ல கல்வி கிடைப்பதில்லை" என பேசி இருந்தார்.
இதற்கு திமுக துணை பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலடி தந்துள்ளார். அந்த பதிவில் "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற நெறியில் வந்த தமிழ்நாட்டிற்கும் பிறப்பால் பேதம் கற்பிக்கும் சனாதனத்திற்கும் எந்தத் தொடர்பும் இருந்ததில்லை.
வரலாறு முழுவதும் பிறரது அடையாளங்களைச் சிதைத்து தனதாக்கிக் கொள்வதைத் தான் சனாதனம் செய்து வருகிறது. அறிவியலுக்கு ஒவ்வாத புரட்டுகளைத் தவிர்த்து சனாதனத்திடம் வேறெதுவும் இருந்ததில்லை.
தமிழ்நாடு என்னும் திராவிடப் பெருநிலம் அவற்றை ஒருநாளும் ஏற்றதுமில்லை! நாள்தோறும் ஏதேனும் அவதூறுகளைப் பரப்பியவாறு மக்களாட்சிக்கு இடையூறு விளைவித்து வரும் ஆளுநர் ரவி அவர்கள், சிறிது நேரம் அமைதி காக்கவும்" என பதிலடி கொடுத்திருந்தார்.
அதனை ரிட்விட் செய்த நடிகை கஸ்தூரி "தமிழரின் அடையாளங்களையும் நம்பிக்கைகளையும் அழிப்பதே மறக்கடிப்பதே திராவிடீய கொள்கை என்னும்போது... ஆளுநர் ரவியோடு என்ன வேணாலும் சண்டை போட்டுக்குங்க. அதுக்காக திருவள்ளுவரின் அடையாளத்தை ஏன் மாற்றுகிறீர். திருக்குறளே அறம் பொருள் இன்பம் (வீடு) என்ற சனாதன தர்ம சிந்தனை நூல்தானே" என விமர்சனம் செய்துள்ளார். நடிகை கஸ்தூரியின் இந்த கருத்து தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகை கஸ்தூரிக்கு எதிராக திராவிட சித்தாந்தத்தை பின்பற்றும் இணையதள வாசிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
English Summary
Kasthuri response to Kanimozhi comment on Sanadana Dharma