உங்களுக்கு "எள்ளுக்கும்; கொள்ளுக்கும்" வித்தியாசம் தெரியுமா? - ஸ்டாலினை வெளுத்து வாங்கிய ஈ.பி.எஸ்.!!
Eps criticized mkStalin in Theni
தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து தேனி மாவட்டம் பங்களா மேட்டில் அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு பேருரையாற்றினார். அப்போது பேசிய அவர் "இந்த தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரும் ஆமா முக சார்பில் போட்டியிடும் வேட்பாளரும் அதிமுகவிலிருந்து சென்றவர்கள்.
இரட்டை இலைக்கு துரோகம் செய்த இவர்களுக்கு தொண்டர்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். அதிகாரம் சுயநலம் பதவிக்காக கட்சி மாறி சென்றவர்களுக்கு மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம் ஜி ஆர் ஜெயலலிதா உங்கள் வாயிலாக தண்டனை வழங்குவார்கள்.
பாஜக நோட்டாவுடன் போட்டியிடும் கட்சி என விமர்சனம் செய்த தினகரன் தற்போது பச்சோந்தி போல கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளார். இந்தியாவை காக்க ஸ்டாலின் வருகிறார் என கூறுவது வேடிக்கையாக உள்ளது. இந்தியா கூட்டணியை ஏற்படுத்தி மக்களை ஏமாற்றி மத்தியில் ஆட்சி அமைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்கிறார் மு.க ஸ்டாலின்.
அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்காக பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினோம். ஆனால் விவசாயிகள் பற்றி பேசாத ஒரே முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மட்டும்தான். அவருக்கு கொள்ளுக்கும் எள்ளுக்கும் வித்தியாசம் தெரியாது. ஆனால் என்னை பச்சைப்பொய் பழனிச்சாமி என விமர்சனம் செய்கிறார்.
திமுக ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பொய் பேசும் ஸ்டாலின் தான் பச்சை பொய் பேசுகிறார். திமுக கூட்டணியில் 38 பேர் எம்பியாக உள்ளனர். அவர்கள் தமிழ்நாட்டிற்கு என்ன திட்டத்தை கொண்டு வந்தனர். ஆனால் காவிரி விவகாரத்தில் அதிமுகவினர் மக்களவையை 22 நாட்கள் முடக்கினர்.
தமிழக மக்களுக்கு தீங்கு என்றால் எதிர்ப்போம். எனக்கு பின்னால் யார் வேண்டுமானாலும் அதிமுகவின் பொது செயலாளர் ஆகலாம். இந்த கட்சி தொண்டர்களுக்கானது. திமுகவைப் போல வாரிசு அரசியல் செய்யும் கட்சி அல்ல. எங்களை அவதூறாக பேசுவதை விட்டுவிட்டு இதுவரை தமிழக மக்களுக்காக என்ன செய்தோம் இனி என்ன செய்யப் போகிறோம் என அவர் கூற வேண்டும்" என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.
English Summary
Eps criticized mkStalin in Theni