நீங்க என்ன கூட்டணி வச்சிருக்கீங்க! இதோ பாருங்கள் எங்கள் வெற்றி கூட்டணி! வாரி வழங்கிய திமுக! சந்தோஷ மழையில் தோழமை!
dmk congress coalition
அதிமுக பாமக பாஜக கூட்டணி வலுவான கூட்டணியே இல்லை. நாங்கள் அமைத்திருக்கும் கூட்டணி தான் வலுவான கூட்டணி என்பது போல திமுக காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை டெல்லியில் நடைபெற்று இறுதி கட்டத்தினை எட்டியுள்ளது. 15 தொகுதிகள் வரை காங்கிரஸ் கட்சிக்கு கேட்டு வருவதால் திமுக அதற்கு ஒப்புக் கொள்ளாமல் இதுவரையில் இந்த கூட்டணி பேச்சு வார்த்தை கொண்டிருக்கின்றது. எளிதாக முடியும் எனக் கருதப்பட்ட நிலையில் பேச்சு இழுபறி நிலையில் இருப்பதால் டெல்லியில் தொடர் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
கலைஞர் கருணாநிதி இருந்தவரைக்கும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அங்கிருந்து பிரதிநிதிகள் திமுகவை தேடி வந்த நிலையில் தற்போது திமுக பிரதிநிதிகள் காங்கிரஸை தேடி சென்று உள்ளனர். இதற்கு முக்கிய காரணம் திமுக தலைவர் ஸ்டாலின் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து கூண்டில் சிக்கிய கிளியாக மாட்டிக்கொண்டது தான். இதிலேயே பின்னடைவை சந்தித்த திமுக தற்போது தொகுதி பங்கீட்டில் மிகவும் பின்னடைவை சந்தித்து வருகிறது.
ஏனெனில் காங்கிரஸ் கட்சி 15 தொகுதிகளை கேட்க திமுக தரப்பில் முதலில் ஆறு தொகுதிகள் மேல் இல்லை என்று கூறினாலும் பின்னர் தற்போது 10 தொகுதிகள் வரை இறங்கி வந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. 4 சதவீத வாக்குள்ள கட்சிக்கு 10 தொகுதிகள் அதிகம் தானே. ஏனெனில் 5 .3 சதவீதம் வைத்துள்ள பாமகவிற்கே அதிமுக 7 தொகுதிகளை மட்டுமே கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ராகுல் காந்தி வீட்டில் தமிழக காங்கிரஸ் சார்பில் ஒரு மிகப் பெரிய பட்டாளமே வந்து இறங்கி உள்ளது. ஒவ்வொருவருக்கும் ஒரு தொகுதியை ஒதுக்கினாலும் 15 தொகுதிகள் வேண்டும் என்ற நிலையில்அங்கே கூட்டம் கூடி இருக்கிறது. திமுக-காங்கிரஸ் கூட்டணி எந்த அளவில் இருக்கும் என்பது போகப்போகத்தான் தெரியவரும். சிதம்பரம், திருநாவுக்கரசர், இளங்கோவன், அழகிரி, தங்கபாலு, வசந்தகுமார் என பட்டியல் நீண்ட தூரம் செல்வதால் திமுக கொஞ்சம் அலறத்தான் செய்கிறது.
இருந்தாலும் திமுக காங்கிரசிற்கு பெரிய மனது பண்ணி 10 தொகுதிகளை வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இன்னும் தோழமை கட்சிகள் என விடுதலை சிறுத்தைகள் கம்யூனிஸ்டுகள் மதிமுக கொங்குநாடு மக்கள் முன்னேற்ற கழகம் போன்ற கட்சிகள் போக திமுக எத்தனை தொகுதியில் போட்டியிடும் என்பது பொறுத்திருந்து பார்த்தால் தான் தெரியவரும்.