பெரு :: முன்னாள் ஜனாதிபதி பெட்ரோ காஸ்டிலோ மீது வழக்கு தொடர நாடாளுமன்றம் ஒப்புதல்...!!
Peru Parliament approves prosecution of ex president Pedro Castillo
தென் அமெரிக்க நாடான பெருவில் கடந்த டிசம்பர் மாசம் அதிபராக இருந்த பெட்ரோ காஸ்டிலோ மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இதையடுத்து அந்நாட்டின் புதிய அதிபராக, துணை அதிபராக இருந்த பெண் தலைவர் டினா பொலுவார்டே பதவி ஏற்றார்.
இந்நிலையில் பெட்ரோ காஸ்டிலோ பதவி நீக்கம் செய்யப்பட்டு கைது செய்ததற்கு அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் பெட்ரோ காஸ்டிலோவை விடுவிக்க கோரியும், தற்போதைய அதிபர் டினா பொலுவார்டே பதவி விலக வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், பெட்ரோ காஸ்டிலோ மீதும், இரண்டு முன்னாள் அமைச்சர்கள் மீதும் ஊழல் உள்ளிட்ட கூட்டுக்குற்றம் தொடர்பாக நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. சுமார் நான்கு மணி நேரம் நடந்த விவாதத்தில் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளவதற்கு ஒப்புதல் அளிப்பது குறித்து நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது.
இதில் அவர்கள் மீது வழக்கு தொடர 59 பேர் ஆதரவாக ஓட்டளித்தனர். மேலும் 23 பேர் எதிராகவும் மூன்று பேர் வாக்கெடுப்பை புறக்கணித்தனர். இந்நிலையில், அதிகப்படியானவர்கள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்ததால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.
English Summary
Peru Parliament approves prosecution of ex president Pedro Castillo