ஈக்வடாரில் பயங்கர நிலச்சரிவு - 16 பேர் பலி, மீட்பு பணிகள் தீவிரம்...!
16 died in landslide in Ecuador and rescue operations intensified
தென் அமெரிக்கா நாடான ஈக்வடாரில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் ஏராளமான வீடுகள் மற்றும் சாலைகள் நீரில் மூழ்கியுள்ளன. கனமழையை தொடர்ந்து தாழ்வான மற்றும் மலைப்பகுதிகளில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் கனமழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட 14 மாகணங்களுக்கு அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய ஈக்வடாரில் ஆண்டியன் பகுதியில் நேற்று முன் தினம் ஏற்பட்ட நிலச்சரிப்பில் 12க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்தன. இதையடுத்து தீயணைப்பு மற்றும் பேரிடர் கால மீட்பு படையினர் மண்ணில் புதைந்தவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த பயங்கர நிலச்சரிவில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 25 பேர் காயமடைந்துள்ளதாகவும், 50-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாகவும் மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து பாண்-அமெரிக்க நெடுஞ்சாலையில், ஏற்பட்ட நிலச்சரிவில் 163 வீடுகள் சேதம் அடைந்துள்ளதாகவும், 500 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மாகாண நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெவ்வேறு பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவால் நூற்றுக்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதால் பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
English Summary
16 died in landslide in Ecuador and rescue operations intensified