கருக்கலைப்பு வழக்கு | சென்னை அருகே கைது செய்யப்பட்ட பெண் இன்ஸ்பெக்டருக்கு திடீர் நெஞ்சுவலி!
Vandalur arrested Lady Inspector Heart Pain
கருக்கலைப்பு வழக்கில், மருத்துவர்களை மிரட்டி 12 லட்சம் ரூபாய் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் இன்ஸ்பெக்டருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால் பரபரப்பு.
செங்கல்பட்டு : காட்டாங்கொளத்தூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை, திரிசூலம் ரஞ்சித் என்ற 27 வயது இளைஞர் கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் தந்தை வண்டலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இன்ஸ்பெக்டர் மகிதா அன்ன கிருஷ்டி வழக்குப்பதிவு செய்து ரஞ்சித்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தார்.
இந்த நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்தபோது, அந்த சிறுமிக்கு ஏற்கனவே கருக்கலைப்பு செய்யப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்த போலீசார் விசாரணையில், சிங்கப்பெருமாள் கோவில், மறைமலைநகர் பகுதியில் உள்ள மருத்துவமனை மற்றும் கிளினிக்கில் சிறுமிக்கு கருக்கலைப்பு செய்தது தெரியவந்தது.
சம்மந்தப்பட்ட கிளினிக்கை நடத்தி வரும் அரசு மருத்துவர் பராசக்தி மற்றும் மறைமலைநகர் பகுதியில் கிளினிக் நடத்தி வரும் மருத்துவர் உமா மகேஸ்வரி ஆகியோரிடம் இன்ஸ்பெக்டர் மகிதா அன்ன கிருஷ்டி விசாரணை நடத்தினார்.
மேலும், அரசு மருத்துவர் பராசக்தியிடம் ரூ.10 லட்சமும், மருத்துவர் உமா மகேஸ்வரியிடமிருந்து ரூ.2 லட்சம் என மொத்தம் ரூ.12 லட்சம் வாங்கி உள்ளார் இன்ஸ்பெக்டர் மகிதா அன்ன கிருஷ்டி.
இதுகுறித்த புகாரின் பேரில் தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் விசாரணை நடத்தி, கடந்த 11-ந்தேதி இன்ஸ்பெக்டர் மகிதா அன்ன கிருஷ்டியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
மேலும், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் மகிதா அன்ன கிருஷ்டியை, நேற்று பொன்னேரி அருகே வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
கைதுசெய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் மகிதா அன்ன கிருஷ்டிக்கு இன்று காலை மருத்துவ பரிசோதனைக்காக போலீசார் அழைத்து சென்றனர்.
அப்போது, மருத்துவமனையில் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
English Summary
Vandalur arrested Lady Inspector Heart Pain