திருவள்ளூர் | வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை அடித்த மர்ம நபர்கள்! போலீசார் வலைவீச்சு!
Tiruvallur broke lock house robbers police investigation
திருவள்ளூர்: எல்லாபுரம் ஒன்றியம் அத்தங்கிகாவனூர் கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் தயாளன் (வயது 56). இவர் விவசாயி ஆவார். இவர் இங்கு மனைவி சரஸ்வதியுடன் வசித்து வருகிறார்.
இவர்களது மூத்த மகன் சரவணன் (வயது30) ஐ.டி.நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இளைய மகன் பரந்தாமன் (வயது28) இவர் ஷிப்பிங் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு திருமணமான நிலையில் செங்குன்றத்தில் வசித்து வருகின்றனர்.
விவசாய நிலத்தை பராமரித்துக் கொண்டு தயாளன் தனது மனைவியுடன் அத்தங்கிகாவனூர் கிராமத்தில் வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில், தயாளனுக்கு உடல்நிலை சரியில்லாததால் நேற்று காலை தனது மனைவியுடன் சென்னை,செனாய் நகரில் உள்ள மருத்துவமனைக்கு சென்று இருந்தார்.
சிகிச்சை பெற மருத்துவமனையில் கால தாமதம் ஏற்பட்டதால் நேற்று இரவு செங்குன்றத்தில் உள்ள மகன்கள் வீட்டில் இருவரும் தங்கி இருந்தனர். பின்னர் இன்று காலை தனது மனைவியுடன் அத்தங்கிகாவனூருக்கு வந்தார்.
அவர்கள் வீட்டிற்கு வந்ததும் வீட்டின் முன் பக்க கதவு மற்றும் பின்பக்க கதவுகள் உடைக்கப்பட்ட நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
பிறகு உள்ளே சென்று பார்த்தபோது லாக்கர் மற்றும் பீரோ உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பொருட்கள் சிதறிய கிடந்தது. மேலும் 40 சவரன் தங்க நகைகளும், சுமார் 3 கிலோ எடை கொண்ட வெள்ளிப் பொருட்களும், ரூ.4 லட்சம் உள்ளிட்டவை மர்ம நபர்களால் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் குறித்து உடனடியாக வெங்கல் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர்.
ஊத்துக்கோட்டை துணைபோலிஸ் எஸ் பி சம்பவ இடத்துக்கு வந்து வீட்டை பார்வையிட்டார். மேலும், விவசாயி தயாளன் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். திருவள்ளூரில் இருந்து சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் ராக்சி வரவழைக்கப்பட்டது.
English Summary
Tiruvallur broke lock house robbers police investigation