17 வருடங்கள் காத்திருந்தும் தரிசனத்திற்கு அனுமதி வழங்காததால் திருப்பதி தேவஸ்தானத்திற்கு அதிரடி உத்தரவு!
Tirupati Devasthanam Case judgement
17 வருடங்கள் காத்திருந்தும் தரிசனத்திற்கு அனுமதி வழங்காததால் மனுதாரர் தொடுத்த வழக்கில், திருப்பதி தேவஸ்தானம் ஒரு வருட காலத்தில் மனுதாரருக்கு தரிசனம் செய்ய வாய்ப்பு கொடுக்க வேண்டும். இல்லையெனில், சேவை குறைபாட்டிற்காக ரூ. 45 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று சேலம் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சேலம் மாவட்டம், அழகாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால். இவரது மகன் ஹரிபாஸ்கர். இவர் கடந்த 2006-ஆம் ஆண்டு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் மேல் சாத்து வாஸ்திர சேவை தரிசனத்திற்காக 2 பேருக்கு ரூ.12 ஆயிரத்து 250 செலுத்தி முன் பதிவு செய்தனர்.
அப்போது, அவர்களுக்கு தரிசனத்திற்கு 2020-ம் ஆண்டு ஜூலை 10-ம் தேதி ஒதுக்கப்பட்டு ரசீது கொடுக்கப்பட்டது. இந்த நிலையில், அந்த நேரத்தில் கொரோனா தொற்று காரணமாக தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது.
இதனால், மேல் சாத்து வாஸ்திர சேவை தரிசனம் செய்ய வேறு தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதன் பின்னர், தற்போது அந்த வாய்ப்பு இல்லை என்றும், பிரேக் தரிசனம் செய்ய தேதி தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, 17 வருடம் காத்திருந்தும் அவர்களுக்கு தரிசனம் செய்ய வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதனால், தேவஸ்தானம் மீது சேலம் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரித்த நீதிபதி, திருப்பதி தேவஸ்தானம் ஒரு வருட காலத்தில் மனுதாரருக்கு தரிசனம் செய்ய வாய்ப்பு கொடுக்க வேண்டும். இல்லையெனில், சேவை குறைபாட்டிற்காக ரூ. 45 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மேலும், இந்த தரிசனத்திற்காக மனுதாரர் கட்டிய ரூ.12,250 தொகையை இரண்டு மாத காலத்தில் திருப்பி கொடுக்க வேண்டும். இல்லையெனில், 6 சதவீதம் வட்டியுடன் சேர்த்து தர வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
English Summary
Tirupati Devasthanam Case judgement