அலட்சியமாக கிடந்த அரசு கட்டிட கட்டுமான பணிகளின் பள்ளம்... சிறுவன் பரிதாப பலி.. பெற்றோர்களே கவனமாக இருங்கள்.!
Theni Devadanapatti Govt Building Construction Child Harish Death 9 December 2020
தேனி மாவட்டத்தில் உள்ள தேவதானப்பட்டி காட்டுரோடு பகுதியை சார்ந்தவர் செல்வா. இவருக்கு ஆறு வயதுடைய ஹரிஷ் என்ற மகன் இருக்கிறார். தேவதானப்பட்டியில் அரசு நெல் கொள்முதல் நிலையத்திற்காக கட்டிடம் கட்ட பத்து அடி அளவிலான பள்ளம் தோண்டப்பட்டு இருந்துள்ளது.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தேனி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதியில் பெய்த மழை காரணமாக, கட்டிடம் கட்டுவதற்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் நீர் நிரம்பி இருந்துள்ளது. சிறுவன் தனது நண்பர்களுடன் சம்பவ இடத்தில் விளையாடிக்கொண்டு இருந்துள்ளான்.
இதன்போது, சிறுவன் ஹரிஷ் எதிர்பாராத விதமாக அந்த பள்ளத்தில் விழுந்த நிலையில், இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த சிறுவர்கள் கூக்குரலிட்டபடி அக்கம் பக்கத்தினர் மற்றும் ஹரிஷின் பெற்றோர்களை அழைத்துள்ளனர்.
இதனையடுத்து பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சிறுவனை மீட்கும் முயற்சியில் களமிறங்கிய நிலையில், சம்பவ இடத்திற்கு தேவதானப்பட்டி காவல் துறையினரும் விரைந்தனர். பின்னர் சிறுவனின் உடலை பெற்றோர்கள் பிணமாக மீட்ட நிலையில், கட்டுமான பணிகள் அலட்சியமாக நடைபெற்றதாகவும், அப்பகுதியில் எந்த விதமான பாதுகாப்பு பலகைகள் அல்லது தடுப்புகள் வைக்கப்படவில்லை என்றும் உறவினர்கள் சிறுவனின் சடலத்துடன் மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் காவல் துறையினர் சிறுவனின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ஹரிஷின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் அரைமணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Tamil online news Today News in Tamil
English Summary
Theni Devadanapatti Govt Building Construction Child Harish Death 9 December 2020